2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும், சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தொடர்ந்து சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க அதிமுக சென்றால், அவர்களை திமுக தடுப்பது வன்மையாக கண்டிக்கிறேன். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி 63 பேர் இறந்துள்ளனர். இதை உடனிருந்து நடத்தியவர்கள் திமுகவினர். மக்களவையில் சபாநாயகர் பதவியேற்ற போது, எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்க வேண்டும் என ராகுல் காந்தி சொன்னபோது, திமுகவினர் அதை ஆதரித்தனர். ஆனால் இங்கு திமுகவினர் என்ன செய்கிறார்கள்? ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய்யா?.

அதிமுகவினர் விளம்பரம் தேடுவதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். கிழியாத சட்டையை கிழித்துக்கொண்டு, எல்லா மீடியா முன்பும் நின்றுக்கொண்டு விளம்பரம் தேடியது போல அதிமுகவுக்கு விளம்பரம் தேட அவசியம் இல்லை. கடந்த முறை சபாநாயகர் இருக்கையிலேயே திமுகவினர் அமர்ந்தனர். அதை விட அவை மீறல் வேறு எதுவும் இல்லை. இந்தப் போராட்டம் இதோடு நின்றுவிடாது. அதிமுகவும், தேமுதிகவும் தொடர்ந்து போராடி வருகிறோம். நாளை ஆளுநரை சந்திக்க உள்ளோம்.
அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்காமல், தேர்தலை பற்றி மட்டுமே திமுக அரசு யோசிக்கிறது. கள்ளக்குறிச்சி இறப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். 2026ல் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணியுடன் ஆட்சி அமைப்போம். சிபிஐ விசாரணை நடந்தால் உண்மை வெளிவரும் என்பதால், அதை தடுக்க ஆர்.எஸ் பாரதி பார்க்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எல்லாவற்றுக்கும் முதலில் வந்தவர், இப்போது மக்களை சந்திக்கவில்லை. 10 லட்சம் காசோலை வழங்கினால் போதாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணித்துள்ளோம். ஈரோடு கிழக்கில் அநாகரீகமான அரசியலை திமுக முன்னெடுத்ததால், எதிர்ப்பை தெரிவிக்க புறக்கணித்துள்ளோம். சீமான் எங்கள் ஆதரவை கோரியுள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்தார்.