நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிறைவடைந்த நிலையில் இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் விடாமுயற்சி திரைப்படம் தான் கடந்த ஒரு வருடமாகவே நிலுவையில் இருந்து வருகிறது. அதாவது அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் வெளியாகி ஒரு வருடங்கள் ஆகிய நிலையில் அடுத்ததாக அஜித் படம் எதுவும் வெளிவரவில்லை என ரசிகர்கள் பலரும் சற்று அதிருப்தியில் இருக்கின்றனர். இருப்பினும் விடாமுயற்சி படக்குழு விடாமுயற்சியுடன் போராடி வருகிறது.
அதன்படி ஏற்கனவே அஜர்பைஜானில் இதன் 70% படப்பிடிப்புகள் முடிவடைந்தது. அதன் பின்னர் சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. ஓரிரு நாட்கள் படப்பிடிப்புக்கு பின்னர் அஜித், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை திரும்பியுள்ளார். வருகிற ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஜூலை மாத இறுதிக்குள் விடாமுயற்சி படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என்று தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது அஜர்பைஜானில் தீவிரமான சண்டைக் காட்சி ஒன்று படமாக்க திட்டமிடப்பட்டிருந்ததாம்.
ஆனால் படக்குழு அஜர்பைஜானில் இருக்கின்ற பட்சத்தில் அங்கு பொருட்செலவு அதிகமாகி வருவதால் அந்த சண்டைக் காட்சியை ஐதராபாத்தில் படமாக முடிவு செய்துள்ளதாம் விடாமுயற்சி படக்குழு. எனவே விரைவில் படக்குழு ஐதராபாத்திற்கு செல்லும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோர் நடித்து வரும் விடாமுயற்சி படம் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -