spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅதிமுகவும், ஆர்எஸ்எஸ்-ம் ஒன்றுதான்! கொடியில் இருந்து அண்ணாவை எடுத்துவிடுங்கள்! விளாசும் அய்யநாதன்!

அதிமுகவும், ஆர்எஸ்எஸ்-ம் ஒன்றுதான்! கொடியில் இருந்து அண்ணாவை எடுத்துவிடுங்கள்! விளாசும் அய்யநாதன்!

-

- Advertisement -

இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள்  அமைச்சர்கள் கலந்துகொண்டது எந்த காலத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றது குறித்து அதிமுக விளக்கம் அளித்திருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது சர்ச்சையாகி உள்ளது. இதனால் அதிமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தேவையற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு விளக்கம் கொடுப்பது அரசியல் முதிர்ச்சி இன்மை ஆகும். ஒரு கட்சி என்பது அடிப்படையில் அது கொண்டிருக்கிற கொள்கை தான். கொடி, சின்னம், தலைமை ஆகிய மூன்றுக்கும் பலம் சேர்ப்பது கொள்கை. அண்ணா, என்றால் அவர் ஒரு மதச்சார்பற்றவர். அண்ணா என்றால் பழமைவாதத்தை எதிர்க்கும் ஒரு சீர்திருத்தவாதி. ஜனநாயக அரசியலின் ஒரு முன்னோடி. அவரது உருவப்படத்தை கொண்டிருக்கிற ஒரு கட்சி, இந்து முன்னணி என்கிற மதத்தை அடிப்படையாக கொண்டிருக்கிற கட்சியின் மாநாட்டில் எப்படி கலந்துகொள்ள முடியும்?

முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றால் அதில் அதிமுக பங்கேற்க வேண்டும் என்ற கொள்கை ரீதியான முடிவு உள்ளதா? நீங்கள் கொண்ட கொள்கைக்கு மக்கள் ஆதரவு அளித்ததால் தமிழ்நாட்டில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளீர்கள். அதனால் அதிமுகவுக்கு இந்த அடையாளம், ஆதரவு தேவை அற்றதாகும். இந்த ஆதரவு இல்லாமல் தான் அதிமுக கட்சியாக இருந்தது. முருக பக்திக்கும், மாநாட்டிற்கும் என்ன தொடர்பு உள்ளது?. இந்து முன்னணி மதக்கலவர அடையாளம் உள்ளது என்பதால் தான் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏராளமான காவல்துறையினரை போட்டு கட்டுப்பாடு போட்டீர்கள்? ஆர்.எஸ்.எஸ்-ன் ஊர்வலத்தை உங்களது அரசு தானே நீதிமன்றத்திற்கு சென்று தடை செய்தது. வரலாறு அப்படி இருக்கிறபோது, இந்து முன்னணி மாநாட்டில் போய் நிற்பதற்கான அடிப்படை என்ன உள்ளது? அண்ணா எந்த இடத்தில் இதை செய்தார்?. இந்து முன்னணியினர் பெரியாரை தான் திட்டினார்கள் என்று எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா? காரணம் அண்ணா உங்கள் கட்சியின் தோற்றுனர். பொதுச் செயலாளர் என்கிற பொறுப்பை எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தாங்கி நிற்கிறார் என்றால்? அதற்கு காரணம் கட்சியின் தலைவர் பதவி என்றைக்கும் பெரியாருக்கு தான் என்று அண்ணா சொன்னதால் தான்.

anna
anna

அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அவர்கள் நிகழ்வுகளில் பங்கேற்கலாம். ஆனால் இந்து முன்னணிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? அப்போது அவர்களது கொள்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அவர்கள் இந்து வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை அதிமுக ஏற்கிறதா? இதே கருத்தை தான் அத்வானி, ஜெயலலிதாவிடம் சொன்னார். அப்போது ஜெயலலிதா ஏற்றுக்கொண்டாரா? ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டாமல் எங்கே கட்டுவது? என்று கேட்டவர்தான் ஜெயலலிதா. ஆனால் இங்கே அது எடுபடாததால் உடனே விட்டுவிட்டார். எம்ஜிஆர் என்றைக்கும் ஆர்எஸ்எஸ்-ஐ ஏற்றுக் கொண்டது கிடையாது. மதவாதம் அரசியலுக்கு தேவை அற்றது என்று எம்ஜிஆர் கருதினார். காமராஜரும் தான் பரிவட்டம் வேண்டாம் என்றார். இன்றைக்கு திருமாவளவனை எல்லோரும் பேசுகிறார்கள். அண்ணா ஒரு மதச்சார்பற்ற தலைவர். அவர் ஒருபோதும் தீபாவளி வாழ்த்து கூறியது கிடையாது. திமுக – அதிமுகவின் தலைவர் அண்ணா தான். இல்லாவிட்டால் அண்ணாவை கொடியில் இருந்து தூக்கி போடுங்கள். எம்ஜிஆரை சொல்லாதீர்கள். ஏனென்றால் மதவாத விவகாரங்களில் எம்ஜிஆர் இறுதிவரை உறுதியாக நின்றார். ஜெயலலிதா தமிழ்நாட்டின் உரிமைகள் என்று வருகிறபோது உறுதியாக நின்றார். என்னை பொறுத்தவரை இன்றைய அதிமுகவும், ஆர்.எஸ்..எஸ்-ம் ஒன்றுதான். இன்றைய பாஜகவும், அதிமுகவும் ஒன்றுதான். இவர்கள் கொள்கை கூட்டணி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் கொள்கை கூட்டணிதான்.

இரும்புப் பெண்மணி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறையாத வரலாறு!

அதிமுக சமூகநீதிக்கான, சமத்துவத்திற்கான ஒரு கட்சியாகும். இந்து முன்னணி எப்படி உங்களுக்கு கொள்கை முன்னுதாரணம் ஆவார்கள்?. மதவாதத்தை அண்ணா சாகும் வரை எதிர்த்தார். எம்ஜிஆர் தனது வாழ்நாள் முழுவதும் மதவாதத்தை எதிர்த்தார். ஜெயலலிதாவிடம், சற்று அனுதாபம் இருந்தது. ஆனால் அவர் மாறினார். அதிமுகவுக்கு இந்த மூன்று தலைவர்களை தாண்டி வேறு யாரும் வழிகாட்டி உள்ளனரா? பாஜக என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நீட்சி ஆகும். ஆனால் அதிமுக என்பது பெரியாருடைய இயக்கத்தின் நீட்சியாகும். அப்படி இல்லை என்றால் அதிமுக அலுவலகத்தில் இருக்கின்ற பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்களை மூட்டை கட்டிவிட்டு, எடப்பாடி பழனிசாமியின் படத்தை மட்டும் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போய் சேருங்கள். மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள். திமுகவினர் கொள்கையில் உறுதியாக நிற்கின்றனர். ஆனால் அதிமுகவினர் தலைவர்களின் சமாதிகளுக்கு மட்டும்தான் செல்கின்றனர். எந்த இடத்திலும் அதிமுக இந்து முன்னணி மாநாட்டில் பங்கேற்றதை நியாயப்படுத்தவே முடியாது. இதற்கு எந்த கொள்கை தொடர்பும் கிடையாது.

என்னை பொறுத்தவரை அதிமுகவினர் அடிப்படையில் என்றைக்கோ சங்கிகளாக மாறிவிட்டனர். தற்போது கேள்வி எழுப்பியதால் விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. நீங்கள் ஆர்எஸ்எஸ்-இன் கொள்கைக்கு போய் விட்டீர்கள். பெரியார் சமூகநீதி என்கிற அடிப்படையை கொடுத்தார். வேதத்தை தூக்கி போட்டுவிட்டு சாத்வீக வழிக்கு வாருங்கள் என்று சொன்னவர்தான் வடலூர் வள்ளலார். ஐயா வைகுண்டர். நாராயணகுரு போன்ற ஆன்மீகவாதிகள். இவர்களுக்கு மாலை போட்டு வணங்கிவிட்டு, மறுபடியும் இந்து முன்னணி மாநாட்டில் போய் உட்கார்ந்தால் அதற்கு என்ன அர்த்தம்? அப்போது அதிமுக சாதியை ஏற்றுக் கொள்வதாக அறிவியுங்கள். இந்து என்பது சாதிதான், என்று  பெரியார், அம்பேத்கர் சொல்கிறார்கள். அவர்கள் வேதவழி என்று தான் சொல்வார்கள். இந்துத்துவாதிகள் கிடையாது. அப்போது இந்துக்கள் என்றால் பாஜக ஏன் இடஒதுக்கீடு முறையை எதிர்க்கிறார்கள்?. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக அத்வானி ஏன் ரத யாத்திரை சென்றார். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒத்துக்கொண்டால் அத்வானி யாத்திரையை ரத்து செய்வதாக வாஜ்பாய் மிரட்டினார். ஆனால் வி.பி.சிங் ஒப்புக் கொள்ளவில்லை. ஆட்சி போனாலும் பரவாயில்லை. கொள்கை முக்கியம் என்று உறுதியாக நின்றார். ஆனால் அதிமுக எங்கே நிற்கிறது?

மனநலன் பாதிக்கப்பட்டவர் போல அண்ணாமலை பேசி வருகிறார்: ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்

அதிமுகவுக்கு இன்றைக்கு பதவி வெறி. அதிகார வெறி. இதை தவிர வேறு எதுவும் கிடையாது. கொள்கை பற்று என்பது எதுவும் கிடையாது. ஆர்.பி. உதயகுமார் போன்றவர்கள் முழுமையான பொய்யர்கள். நவீன இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடையாளம் கொடுத்ததே திராவிட இயக்கம் தான். அப்படிபட்ட ஒரு கட்சியின் உறுப்பினராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இருந்துகொண்டு அதிமுகவினர் விட்டுக் கொடுக்கும் அரசியலை செய்கின்றனர். அதுதான் உங்கள் கட்சி பலவீனமடைந்து விட்டது. ஜெயலலிதா மறைந்தபோது, அதிமுகவுக்கு 42 சதவீத வாக்குகள் இருந்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது 33 சதவீத வாக்குகள் இருந்தது. அடுத்த 3 வருடங்களில் மக்களவை தேர்தலின்போது 21 சதவீதம். இன்றைக்கு 15 அல்லது 10 சதவிகிதம் என்று யாருக்கும் தெரியாது. விஜயை அழைக்கிறீர்கள். ராமதாசை அழைக்கிறீர்கள். பாஜக உடன் கூட்டணி சேர்ந்துகொள்கிறீர்கள். மெகா கூட்டணிதான் ஒரே வாய்ப்பு. ஏன் அதிமுக பலம் வாய்ந்த கட்சியாக இருந்ததே? அது எங்கே போனது. உங்களுடைய கொள்கை போனது. உங்களது அடித்தளமும் போய்விட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ