டிடிவி தினகரன் விஜய் கூட்டணிக்கு செல்ல உள்ளார். எனவே தான், அவர் சீமானை கண்டித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.


அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஓபிஎஸ்க்கு எந்த சிக்கல்கள் இல்லை என்றாலும், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக சொல்வதில் சிக்கல்கள் உள்ளன. ஓபிஎஸ்-ன் பேச்சுக்கள் அவர் அதிமுக கூட்டணியிலேயே தொடர்வதை போன்று தோன்றலாம். ஆனால் அவர் திமுகவுக்கான கூட்டணி கதவுகளையும் திறந்து வைத்துள்ளார். எடப்பாடியை அதிமுகவை கைப்பற்றிவிட்டார். அதற்காக ஓபிஎஸ் துறவறமா செல்ல முடியும். செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு போன்றவர்கள் திமுகவுக்கு போய் பெரிய ஆட்களாக ஆகவில்லையா? அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு திமுகவில் பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அதிகார மையத்திற்கு வருகிறார்கள். அந்த வகையில் ஓபிஎஸ்க்கும் வாய்ப்பு உள்ளது.

என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று சொல்கிறார். தினகரன் சொல்வது உண்மைதான். எடப்பாடியை முதலமைச்சர் என்று சொன்னால், டெல்டாவில் வாக்குகள் வராது. நேற்று வரை தேவர் வாக்குகள் வராது என்று இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கொளுத்தி போட்டதால் மற்ற சமுதாயங்களின் வாக்குகளும் வராமல் போய்விட்டது. அவருக்கு ஆதரவாக இருந்த நாடார் சங்க தலைவர்கள் எல்லாம், அவருக்கு எதிராக மாறிவிட்டனர். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க சொன்ன விவகாரம் தொடர்பாக மற்ற சமுதாயங்கள் எடப்பாடி மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.

தினகரனுக்கு, விஜயுடன் கூட்டணி செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் அவர் விஜய்க்கு ஆதரவாக, சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை தோற்கடித்தது போன்று இம்முறையும் தோற்கடிக்க போவதாகவும் தினகரன் சொல்கிறார். அவர் செய்ய வேண்டாம். எடப்பாடி பழனிசாமி 20 சதவீத வாக்குகளுக்கு மேலாக வந்துவிடாது. 2021ல் 40 சதவீதம் வாக்குகள் இருந்தது. ஓபிஎஸ், ராமதாஸ் போன்றவர்கள் அவருடன் இருந்தனர். தற்போது அவர் பலவீனமடைந்துவிட்டார். தினகரன் அவரை மேலும் பலவீனப்படுத்துவார். அவர் நினைப்பது போல எடப்பாடி பழனிசாமி, வெற்றி கோட்டிற்கு அருகில் எல்லாம் வர மாட்டார்.

அதிமுக – பாஜக கூட்டணி இன்றைக்கு 25 சதவீத வாக்குகளில் தான் உள்ளது. இதுதான் எதார்த்த களம். செங்கோட்டையன் விவகாரத்தில் பாஜகவின் திட்டம் என்ன என்று நயினாருக்கும், வானதி சீனிவாசனுக்குமே தெரியவில்லை. பாஜகவின் திட்டம் என்னவாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பிடித்ததை விட்டுவிட்டு போகமாட்டார். செங்கோட்டையனை பயன்படுத்துகிறார்கள். அவரை பயன்படுத்தி 2 இரட்டை இலைக்கு, ஒரு தாமரை என்று வாங்கிவிட்டார்கள் என்றால் பாஜகவுக்கு ஒரு சாதனை. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி கடைசி வரை இருந்து, தனக்கு சாதகமான டெல்லி சூழ்நிலை வந்தால் அதை பயன்படுத்தி பாஜகவுக்கு குறைந்த இடங்களை கொடுத்துவிட்டு போய்விடுவார். அண்ணாமலை, 20 சதவீத வாக்குகளுக்காக தலைவர் பதவியில் இருந்து தள்ளிவிட்டனர். ஆனால் அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற மாட்டார்கள். அப்படி செய்தால் பாஜகவின் வாக்குகள் போய்விடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


