அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருவதாலோ, முருகன் மாநாடு நடத்துவதாலோ தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகை மற்றும் முருகன் மாநாடு நடத்துவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதவாத அரசியல் தமிழ்நாட்டில் என்றைக்கும் எடுபட்டது கிடையாது. வலது சாரிகளின் மனநிலை என்பது மதத்தின் அடிப்படையில் வாக்குகளை பிரிப்பதாகும். ஆனால் அது எடுபடவில்லை என்பதுதான் உண்மையாகும். 2014ல் மோடி முதன்முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் மத வாதத்திற்கு ஆதரவான வாக்குகள் அல்ல. முந்தைய காங்கிரஸ் அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மோடி மீது குஜராத் முதல்வர், வளர்ச்சி பாதை, குஜராத் மாடல் போன்ற பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டது. அந்த பிம்பத்தின் விளைவாக கிடைத்த வெற்றிதான் அது. காங்கிரஸ் அரசில் இருந்த பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தான் பாஜகவின் வெற்றி சாத்தியமானது. ஆனால் அதை மதவாதத்திற்கான வெற்றியாக அவர்கள் எண்ணினார்கள். அப்படியான வெற்றியாக இருந்திருந்தால் 2024-ல் பாஜக 240 தொகுதிகளாக குறைந்திருக்க கூடாது. ஆனாலும் தமிழ்நாட்டிலும் அதே நிலையை கொண்டுவர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
அமித்ஷா மதுரையில் முருகன் மாநாடு நடத்தி, முருகன் வெற்றியை பெற்றுத் தந்துவிடுவார் என்று நினைப்பது அபத்தமான சிந்தனையாகும். மத்திய அமைச்சர் எல்.முருகன் நடத்திய வேல் யாத்திரையால் என்ன பயன் வந்தது?அடிப்படையில் வாக்கு வங்கி என்பது ஆதரவு, எதிர்ப்பு ஆகியவைதான். இது மாறி மாறி வரும். ஆனால் மாற்றம் இல்லாதது என்பது வளர்ச்சி, அமைதி, வேலைவாய்ப்பு இன்மை ஆகியவைதான். அப்போது அமைதியாக இருக்கின்ற ஒரு மாநிலத்தில் மதம் காரணமாக பிளவு ஏற்பட்டு அமைதி குலைந்துவிடும் என்று மக்கள் நினைத்தால்? எதிர்ப்பு வாக்குகள் மதவாதத்திற்கு யார் ஆதரவாக உள்ளனரோ, அவர்களுக்கு எதிராக மாறிவிடும்.
உதாரணமாக கிறிஸ்தவ வாக்கு வங்கியை எடுத்துகொண்டோம் என்றால், பொதுவாக அனைவரும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நான் வேறுவிதமாக பார்க்கிறேன். அப்படியான ஒரு சிந்தனை இருந்திருந்தால் கேரளாவில் ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றிருக்கக் கூடாது. வக்பு பிரச்சினையில் கேரளாவில் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த கிறிஸ்தவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அது ஏன்? ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் தங்களின் பிரச்சினைகளுக்காக தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றுகின்றனர். இது அனைவருக்கும் பொதுவானது. திமுக தங்களுக்கான வாக்கு வங்கி சரிவு ஏற்பட்டால் அதை திருத்திக்கொள்ள முயற்சிக்கும். ஆனால் பாஜக அப்படியான முயற்சிகளில் இறங்குவது கிடையாது. அவர்கள் மீண்டும் இந்துத்துவா, இந்து ஒற்றுமை, முருகன், ஐயப்பன், ஜெகனாதர் சார்ந்த அரசியல் சித்தாந்தங்களை கட்டமைப்பது சிலந்தி வலை போன்றதாகும்.
உறைந்துபோன சிந்தனைகள் தான் சிலந்தி வலைகளின் கயிறு. அதில் ஒரு அரசியல் கட்சி சிக்கிக் கொள்கிறபோது, அவர்கள் அதிலிருந்து மீள முடியாது. அவர்கள் மீண்டார்கள் என்றால் கோர் வாக்கு வங்கி பாதிக்கப்படும். அப்படி ஒரு வாக்குவங்கி தமிழ்நாட்டில் இல்லை. அதுதான் உண்மையான சிக்கலாகும். அரசியலில் தோற்ற உறுதி என்கிற விஷயம் உள்ளது. உதாரணமாக தேன் என்றால் இனிக்கும். அதேபோல் போல் தான் திராவிட சித்தாந்தம். நூறு வருடங்களுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம். அதை சார்ந்த அரசியல் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதற்கு எதிரானது வேம்பு கசக்கும். அப்போது தேன் இனிக்கும் என்கிற திராவிட சித்தாந்தம். வேம்பு கசக்கும் என்கிற வலதுசாரி சித்தாந்தம். இவை இரண்டும் தமிழ் மண்ணில் எத்தகைய வாக்கு வங்கியை கட்டமைக்கும். அப்போது அமித்ஷா வந்தாலோ, முருகன் மாநாடு நடத்தினாலோ, மோடி 5 வந்தாலோ எல்லாம் மாறிவிடுமா? இவை எதுவுமே மாறவே மாறாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.