கோவையில் நடைபெற்ற தவெக வாக்குச் சாவடி முகவர்கள் கருத்தரங்கிற்கு ஆயிரக்கணக்கானோர் கூடியதாகவும், ஆனால் அவர்கள் எல்லாம் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.
தவெக மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது :-இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்காத கட்சி எங்காவது உருப்பட்டுள்ளதா? அண்ணா மறைந்தபோது ஏன் திமுக மறையவில்லை. அவரால் உருவாக்கப்பட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள், மிகச்சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். அவருக்கு பின்னால் ஒரு கட்சி தொடங்கி அதிலும் மிச்சம் இருக்கும் ஆளுமைகள் இருந்ததால்தான் அதிமுகவை தாங்கினார்கள். எம்ஜிஆர் தலைமை ஏற்றுள்ள அதிமுக, ஜெயலலிதா தலைமை ஏற்றுள்ள அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுள்ள அதிமுகவுக்கு வித்தியாசம் உள்ளது அல்லவா?. இப்போது அதிமுக எவ்வளவு பலவீனமாக உள்ளது.
இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகக் கூடாது என்று நினைக்கிற 2 கட்சிகள் உள்ளன. ஒன்று அழிந்துபோன தேமுதிக. மற்றொன்று அழிந்துகொண்டிருக்கிற நாம் தமிழர் கட்சியாகும். ஒன் மேன் ஷோ நடத்துகிற எந்த கட்சியும் உருப்படாது. விஜய்க்கு ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்று அறிந்துகொள்வதற்கான காலகட்டம் இன்னும் வரவில்லை. வாக்களிப்பதற்கான வயது வராதவர்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை கூப்பிட்டு வந்து சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு உள்ளேயே போக முடியாதே. அவர்களை கூப்பிட்டு வந்து வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு போடுகிறார். நீங்கள் குழந்தைகள் மாநாடு போடுங்கள்.
திமுகவில் தேர்தல் சார்ந்த பணிகளில் ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டிருந்தார். அந்த பேப்பரை எல்லாம் நகல் எடுத்து வைத்துக்கொண்டு ஒரு ஹார்ட் டிஸ்கில் எடுத்துப்போய் கொடுத்து இதேபோல் நாம் வந்துவிடலாம் என்றால், இதை எல்லாம் எப்படி நீங்கள் நடைமுறைப்படுத்துவார்கள். ஆட்களை நீங்கள் எப்படி உருவாக்குவீர்கள். வரிசையில் நின்று ரூ.200 டிக்கெட்டை ரூ.500க்கு வாங்குபவர்கள் வேறு. ரூ.500 கொடுங்கள் வாக்களிக்கிறேன் என்று சொல்பவர்கள் வேறு. வாக்காளர்களுக்கும், ரசிர்களுக்குமான வேறுபாடு தெரியாமல் தன்னைத் தானே வியந்து கொண்டிருக்கிறார் விஜய். அரசியலின் அடிப்படையே தெரியாமல், எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து புரியாமல் பூத் ஏஜெண்டிற்கு 7000 பேரை ஒன்றாக திரட்டுவதை நான் கேள்விப்பட்டதே கிடையாது. மாவட்டந்தோறும், மாநகரந்தோறும், வட்டாரந்தோறும் இவர்கள் சென்று, கட்சியின் இரண்டாம் கட்ட பணிகளை செய்பவர்களை சந்திக்க வேண்டும். அவர்களை ஒரு இடத்திற்கு வரவழைத்துப் பார்க்கும் நடைமுறையே கிடையாது. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் திரட்டுவதால் எதுவுமே நடக்காது.
தற்போது இந்தியாவை சீரழித்துக்கொண்டிருக்கும் இயக்கம் எது ஆர்எஸ்எஸ். அந்த இயக்கத்தில் எத்தனை பேர் உள்ளனர். அதற்கு உறுப்பினர் படிவமே கிடையாது. ஒரு சிலருக்குள் இருக்கும் அந்த விஷமத்தை ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷத்தை கலப்பதை போன்று செய்து, இந்த நாட்டை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திராவிடர் கழகத்தில் இருந்துதான் திமுக, அதிமுக உள்ளது. ஆனால் திராவிடர் கழகத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். எண்ணிக்கை அடிப்படையில் இருக்கிறபோது சில ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். ஆனால் திராவிட இயக்கத்தை கழித்துவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. அதனால்தான் அமித்ஷா வந்தாலும் ஒன்றும் நடக்க மாட்டேங்குவது. மோடி ரோடு ஷோ போனாலும், தியானம் செய்தாலும் ஒன்று நடக்க மாட்டேங்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் எதையும் சாதிக்க முடியவில்லை என அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டார். என்ன தான் எண்ணெயை தடவிக்கொண்டு மண்ணில் புரண்டாலும், ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்பார்கள்.பெரியார் மண் பாஜகவுக்கு ஒட்டவில்லை அல்லவா? அடிப்படையாக ஒரு சித்தாந்தம் இருக்க வேண்டும். அதை செயல்பாட்டு ரீதியாக கொண்டு செல்வதற்கு செயல் வீரர்கள் இருக்க வேண்டும். அதை வழிநடத்த மிகச் சிறந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்க வேண்டும். இதில் எதாவது ஒன்று விஜயிடம் உள்ளதா என்று சொல்லுங்கள். இந்த மாநாடு வெற்றி என்று நான் சொல்கிறேன்.
மண்டல ரீதியாக மாநாடுகளை நடத்துவோம். தற்போது கொங்கு மண்டலத்தில் நடத்தியுள்ளோம். அடுத்து மதுரை மண்டலத்தில் நடத்த உள்ளோம் என்று தவெக தரப்பில் சொல்கிறார்கள். சிவாஜி கணேசன் கட்சி தொடங்கியபோது, மானாமதுரையில் கொடி ஏற்றுவதற்காக வந்தார். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆட்கள் இருந்தார்கள். அந்த தேர்தலில் ஜானகி அம்மாளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவாஜி கட்சிக்கு மொத்தம் 5000 வாக்குகளுக்கும் கீழாகத்தான் பெற்றது. மதிமுகவின் முதல் மாநில மாநாடு மதுரையில் தொடங்குகிறது. சாயங்காலம் 5 மணிக்கு ஊர்வலம் தொடங்கி விடிய விடிய போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை என்று மதிமுககாரர்களே என்னிடம் சொன்னார்கள். கூட்டம் கூடுவார்கள். ஆனால் அந்த இயக்கத்தில் தொடருவார்களா என்பது கேள்வியாகும்.
ஏ.ஆர்.முருகதாஸ் கல்யாணத்திற்காக விஜயகாந்த் கள்ளக்குறிச்சிக்கு போகிறார். அப்போது கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்துதான் அவர் கட்சியை தொடங்கினார். அதே கூட்டம் அவருக்கு எப்போது கூடியது என்றால் விஜயகாந்தின் மறைவின்போது தான். ஒரு கூட்டத்தை ஒரு முறை கூட்டலாம். ஒவ்வொரு முறையும் அப்படிதான் நிகழும். விஜயை தமிழ்நாடு முழுவதும் பார்த்து முடித்துவிட்டார்கள் என்றால் அப்புறம் ஆள்வர மாட்டார்கள். சினிமா நடிகர்கள் என்பவர்கள் மார்க்கெட் இருக்கும் வரை தான் பார்க்க கூட்டம் வரும். மார்க்கெட் போய்விட்டால் அவரை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.