Homeசெய்திகள்கட்டுரைமாமன்னன் : "அப்பா நீ உட்காருப்பா" ஒரு நூற்றாண்டின் உரிமை போர்!

மாமன்னன் : “அப்பா நீ உட்காருப்பா” ஒரு நூற்றாண்டின் உரிமை போர்!

-

- Advertisement -
மாமன்னன் : “அப்பா நீ உட்காருப்பா” ஒரு நூற்றாண்டின் உரிமை போர்!

உயர் சாதிக்காரர்கள் வாழும் தெருக்களுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்லக்கூடாது, அப்படியே சென்றாலும் காலில் செறுப்பு அணியக்கூடாது, தோலில் துண்டுப் போடக்கூடாது, தோல் மீது இருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டுதான் அவர்கள் முன்னாடி நிற்க வேண்டும். இது தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் இந்தியாவின் நிலைமை.

சமுதாயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை என்ற நிலமையை உருவாக்க ஒரு நூற்றாண்டிற்கு முன்பு தோன்றியதுதான் திராவிட இயக்கம்.

மாமன்னன்

மனிதர்கள் அனைவரும் சமம் என்ற ஒற்றை உயர்ந்த சிந்தனையை நிலைநாட்ட இந்த மண்ணில் எத்தனை எத்தனை போராட்டங்கள், உயிரிழப்புகள், தியாகங்கள் என்று வார்த்தையால் வர்ணிக்க முடியாத தழும்புகள் தான் கடந்த நூற்றாண்டின் வரலாறுகள்.

அதனை சுருக்கி இரண்டரை மணி நேரம் திரைப்படமாக இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்தப்படம் தான் “மாமன்னன்”.

படம் தொடங்கும் போதே கதாநாயகன் உதயநிதி பன்றிகளுக்கு தீவணம் வைத்துக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன்.

தமிழ்நாடு முதலமைச்சரின் மகன், ஒரு மாநிலத்தின் அமைச்சர் என்ற அனைத்து பெருமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு பன்றி மீது ஆர்வம் கொண்டவராக, அதனை வளர்ப்பவராக துணிச்சலாக நடித்திருக்கும் உதயநிதியை பாராட்ட வேண்டும்.

maamannan

‘மாமன்னன்’ படத்தில் வைகைப் புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சேலம் மாவட்டம், காசிபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாமன்னன் (வடிவேலு), அவருடைய மகன் அதிவீரன்(உதயநிதி)பன்றி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராகவும், அதே ஊரில் ஆதிக்க சமுதாயத்தில் பிறந்தவர், ஆளும் கட்சியில் மாவட்ட செயலாளராக கம்பீரமாக வளம் வருபவர் ரத்தினம் (பகத் பாசில்) நாய் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் காட்சி தொடங்கு கிறது.

பன்றிகளை நாய்கள் பிடிப்பது, கடிப்பது, வேட்டையாடுவது காலா காலமாக இருந்து வருவதை இயக்குனர் சுருக்கமாக உணர்த்தியுள்ளார்.

மாமன்னன்

“மாமன்னன்” ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் வளர்ந்து வரும் அரசியல் வாதியாக, சட்டமன்ற உறுப்பினராக, அப்பாவாக என்று வடிவேலு வாழ்ந்து இருக்கிறார்.

உதயநிதியின் கல்லூரி தோழி கீர்த்தி சுரேஷ் இடது சாரி சிந்தனைக் கொண்டவர். அவர் நடத்தி வந்த இலவச கல்வி மையத்தை பகத் பாசிலின் அண்ணன் ஆட்களை வைத்து அடித்து நொறுக்கி விடுகிறார். அந்த சம்பவத்தில் இருந்து உதயநிதிக்கும் பகத் பாசிலுக்கும் மோதல் உருவாகிறது.

பகத் பாசில் ஈவு இரக்கம் இல்லாமல் நாயை அடித்துக் கொள்ளும் காட்சியில் தொடங்கி படம் முழுவதும் மிரட்டி இருக்கிறார்.

“இவனுங்க சாதி…. .. .மசுர காப்பத்தரத்து எல்லாம் என் வேலையில்லை, எங்க அப்பா எனக்கு ஓர் இடத்தை உருவாக்கி வச்சிருக்கிறார். நான் என் பையனுக்கு அப்படியான இடத்தை உருவாக்கி தரனும்” என்று பகத் பாசில் பேசும் வசனம் ஆதிக்க சாதியினர் பேசும் வரட்டுத் தனமான நியாயத்தை அப்படியே கொட்டியிருக்கிறார்.

மாமன்னன்

சாதி பின்புலத்தில் நின்று ஆதிக்க மனப்பான்மையை நிலை நாட்ட நாயை கொல்கிறார், சொந்த சாதி தலைவரையும் கொல்கிறார். சாதி ஆதிக்கம் படிப்படியாக மனிதனை எப்படி மிருகமாக மாற்றுகிறது என்பதை பகத் பாசில் தனது நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு காட்சியில் பகத் பாசில் தன் வீட்டில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, சிகரெட் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.அங்கே வந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் (மாமன்னன்) வடிவேலுவை உட்கார சொல்லாமல் நிற்க வைத்து பேசிக் கொண்டிருப்பார். அதை பார்த்துவிட்ட வடிவேலுவின் மகன் உதயநிதி ஆத்திரப் படுவார். “அப்பா நீ உட்காருப்பா” என்று ஆவேசமாக சொல்லுவார்.

வடிவேலு உட்கார மாட்டார்.

அவர் உட்கார மாட்டார் தம்பி என்பார் பகத் பாசில்.. வா நீ வந்து உட்கார், உங்கப்பா உட்கார மாட்டார் என்பார். “இவர இங்க நிக்கவச்சு இருக்கிறது என்னோட அடையாளம், உன்ன உட்கார சொல்றது என்னோட அரசியல்”. என்று ஒற்றை வரியில் சாதி அரசியலின் ஆழத்தை சொல்லி இருக்கிறார்.

வடிவேலுவை காமெடி நடிகனாக பார்த்து ரசித்த நமக்கு ஒரு வலுவான கதாநாயகனாக நடித்து எல்லோரையும் ஆச்சிரியப்பட வைத்துள்ளார்.

மாமன்னன்

வடிவேலு, பகத் பாசில் நடிப்பிற்கு முன் உதயநிதியின் நடிப்பு எடுப்படாமல் போய்விட்டது என்று நினைக்கும் போது “அப்பா நீ உட்காருப்பா” என்ற ஒற்றை வார்த்தையை வெளிப்படுத்திய விதம், முகப்பாவனை என்று நானும் ஒரு நடிகன் தான் என்பதை நிருபித்து விட்டார்.

தன் தந்தை இன்னொருவர் முன்னாடி கூனி குறுகி நிற்பதை எந்த மகனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தன் தந்தை இன்னொரு ஆதிக்க சாதியினர் முன் நின்று பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வார்.

ஒரு நூற்றாண்டு கடந்து நடந்து வரும் இந்த போராட்டத்தை, வலியை “அப்பா நீ உட்காருப்பா” என்ற வரியில் வெளிப்படுத்திய உதயநிதியின் நடிப்பை பாராட்டியே தீரவேண்டும்.

மாரி செல்வராஜின் கதை, திரைகதை, வசனம் அனைத்தும் சிறப்பு. ஆனால் கடைசியில் ஒரு வீடியோ பதிவு மூலம் தேர்தலில் வெற்றிப் பெற முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வடிவேலுவை இப்படி எல்லாம் காட்ட முடியும் என்பதை ஒளிப்பதிவாளர் தனது திறமையை நிருபித்து விட்டார்.

மாமன்னன் சிறந்த படைப்பு

– என்.கே.மூர்த்தி

MUST READ