மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து ஏமாற்றி பெற்றி பெற்றதை போன்று, தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளை பாஜக செய்து வருவதாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை பாஜக கூட்டத்தில் திமுக மீது அமித்ஷா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் பாஜக மையக்குழு கூட்டத்தில் பேசியபோது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அமித்ஷா என்றைக்கு உண்மையை பேசியுள்ளார். அவர்கள் பேசுவதற்கு எதிராக தான் செயல்படுவார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறுகிற பாஜக ஆளுகிற எந்த ஒரு மாநிலமாவது தமிழ்நாடு அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதா? முருகன் மாநாடு நடத்துவது இந்து சமய அறநிலையத் துறையின் வேலையாகும். கோவில்களில் குடமுழுக்கு நடத்துவது. ஆக்கிரமிப்பில் இருந்த 7ஆயிரம் ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்தது திமுக அரசாகும். கோவையிலும், கன்னியாகுமரியிலும் கலவரத்தை ஏற்படுத்தி அங்கே பாஜகவுக்கு இருப்பை ஏற்படுத்தினார்கள். தற்போது மதுரையில் கலவரத்தை ஏற்படுத்தி, அங்கு பாஜகவை நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளனர்.
மதுரையில் கலவரத்தை உருவாக்கி, அந்த பழியை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது போட்டு, அதன் மூலமாக மக்களை பயமுறுத்தி வாக்குகளை பெறுவதற்கான விதையை அமித்ஷா விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஒரு அரசு விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போடுவது துரதிர்ஷ்ட வசமானதாகும். திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தமானது. ஒரு பகுதியில் சிக்கந்தர் தர்கா எப்படி உருவானது என்று வரலாறு உள்ளது. பாதை அனைவருக்கும் பொதுவானது. அந்த இடம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது. ராமர் கோயில் விவகாரத்தில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிந்த பின்பும் உச்ச நீதிமன்றம் பாஜகவின் கோரிக்கையை ஏற்று ராமர் கோவில் கட்ட அனுமதித்தது. இவை தான் இன்றைக்கு திருப்பரங்குன்றத்தின் அமைதியை குலைப்பதற்கு சூத்திர சங்கிகளை பயன்படுத்தி பாஜக வந்துள்ளது.
தமிழின் மீது உண்மையான பற்று கொண்டவர்களாக இருந்தால், கீழடி அகழாய்வுகளையும், தமிழ்நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இரும்பின் பயன்பாடு இருந்ததையும் பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ பாராட்டி உள்ளனரா? கீழடி ஆய்வு முடிவுகளை மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார்கள் தானே இவர்கள். வடநாட்டு கட்சியான பாஜக, தமிழகத்தின் அமைதியை, மத ஒற்றுமையை சீர்குலைக்க ஒருபோது மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே அவர்கள் எடுக்கிற முயற்சி தோல்வி அடையும். 2026ல் திமுக ஆட்சியை அகற்றி அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா சொல்கிறார். ஆனால் எடப்பாடி கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்கிறார்.
பாஜகவின் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவருவதற்கு அதிமுக துணையாக இருந்தால், அதனை எப்படி தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த அதிமுகவும் தோற்கடிக்கப்படும். அதிமுகவுக்கு கிடைத்த 20 சதவீத வாக்கு வங்கி என்பது மோடிக்கு எதிரான வாக்கு வங்கியாகும். அதை எடப்பாடி பழனிசாமி தவறாக பயன்படுத்தியுள்ளார். எடப்பாடி பாஜக உடன் கூட்டணி வைத்து அதிமுகவின் ஒட்டுமொத்த எதிர்காலத்தை படுகுழியில் தள்ளியுள்ளார். இன்றைக்கு சைதை துரைசாமி போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழலாக மாறி, அதிமுகவை பாஜகவின் காலடியில் கிடத்தியுள்ளார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலின்போது 140 மாவட்ட கலெக்டர்களுக்கு போன் செய்து பேசியவர் அமித்ஷா. அன்றைக்கு அவர் பேசாவிட்டால், 140 தொகுதிகளில் பாஜக தோல்வியை சந்தித்து இருக்கும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாகவும், ஆட்சியர்கள் மூலமாகவும் இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெரியும். தமிழகத்தில் அந்த நிலைக்கு வருவதற்கு அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். ஒருபுறம் சாணக்கியா, சி ஓட்டர் போன்ற பல்வேறு ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து அதிமுக – பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். மறுபுறம் பாஜகவினர் மதக் கலவரத்தை தூண்டி சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பை விதைத்து, இந்துக்களை ஒருங்கிணைப்பார்கள். அதேபோல், ஆங்காங்கே கூட்டங்களை நடத்தி, மக்கள் ஆதரவு பெற்றுவிட்டது போன்று பாஜகவினர் தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 116 சாதிகளின் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வார்கள். ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களை தங்களின் பக்கம் வைத்துக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் 3 பேரையும், நயினாரை கொண்டுவந்து காலி செய்துவிடுவார்கள். ராமதாசை கொண்டுவந்து வன்னியர் சமுதாய வாக்குகளை கவர வேண்டும் என்பது அவர்களின் திட்டமாகும். தந்தை – மகன் ஆகியோரது வேடத்தை வன்னிய இளைஞர்கள் புரிந்துகொண்டு ஒருபோதும் மோடிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள். அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ந்ததால், பாஜக – அதிமுக கூட்டணி 20 சதவீதம் வாக்குகளை கூட எடுக்காது. அவர்கள் 3ஆம் இடத்திற்கு தள்ளப்படுவார்கள்.
அண்ணாமலை, தனக்கு என்று ஒரு இளைஞர் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார். அவர் நேர்மையான அதிகாரி என்று கூறி பலர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். பாஜக பதவி இல்லாவிட்டால் அண்ணாமலைக்கு இன்றைக்கு கிடைத்திருக்கும் பெயரும் புகழும், பணமும் பதவியும் கிடைத்திருக்காது. ஆருத்ரா போன்ற மோசடிகள் மூலமாக சேர்த்த சொத்துக்களும், எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி அதன் மூலமாக சேர்த்த பணமும் இன்றைக்கு அண்ணாமலைக்கு கிடைத்து இருக்காது. இத்தனையும் அவருக்கு பின்னால் உள்ள குரூப்பை மெய்ன்டெய்ன் செய்து கொண்டிருக்கிறது. அந்த குரூப் மூலமாகத்தான் இந்த செல்வாக்கை அவர் அமித்ஷா முன்னாள் நிரூபித்துள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தான் அண்ணாமலை போட்டியாக உள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் அவரால் கவுன்சிலர் கூட ஆக முடியாது. ஆனால் பின்னால் கோஷம் மட்டும் போடுவார்கள். ஓட்டு யாரும் போட மாட்டார்கள். என்றைக்கு கட்டி எழுப்பப்பட்ட பிம்பங்கள் நின்றதாக சரித்திரம் கிடையாது. அண்ணாமலை உண்மையிலேய தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்றால் அவர் பாஜகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கி 2026 தேர்தலில் நின்றால் கண்டிப்பாக பாஜகவின் 11 சதவீத வாக்குகளில் 8 சதவீதம் அண்ணாமலைக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் அதிமுக- பாஜக கூட்டணி வீழ்வது போன்று, அண்ணாமலையும் வீழ்ச்சி அடைவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.