ஏடிஜிபி ஜெயராமனுக்கு எதிரான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளதால், விசாரணை விரிவாகவும், தெளிவாகவும் நடைபெறும் என முன்னாள் ஏ.சி.பி., இராஜாராம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் முன்னாள் ஏ.சி.பி., இராஜாராம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திருவள்ளுர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்கிற 23 வயது இளைஞருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பெண்ணிற்கும் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் இது காதலாக மாறிவிடுகிறது. அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி, தனுஷை பதிவு திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பெண்ணின் தந்தை வனராஜா, காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண் கணவருடன் செல்வதாக சொன்னதால், தனுஷுடன் அனுப்பி வைத்துவிட்டனர்.
தற்போது அந்த பெண்ணின் பெயரில் நிறைய சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவோ. அல்லது இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலோ பெண்ணின் தந்தை இருவரையும் பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறார். பெண்ணின் தந்தை திண்டுக்கல்லை பூர்விகமாக கொண்டவர்கள். தற்போது தேனி மாவட்டம் வருஷநாடு பக்கத்தில் உள்ள கடமலைகுண்டு என்கிற கிராமத்தில் தேங்காய் குடோன் வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தேங்காய் வினியோகம் செய்கிறார். பெரிய செல்வந்தர். தனுஷின் குடும்பம் அவ்வளவு பெரிய வசதி கிடையாது. அதனால் தன்னுடைய பெண்ணை எப்படியாவது பிரித்து கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் செய்கிறார்.
வருஷநாட்டில் ஒரு கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. அந்த கோவில் பூசாரியிடம் குறி கேட்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் எல்லாம் வருகிறார்கள். அந்த பூசாரி மூலம் முன்னாள் காவல்துறை அதிகாரியான மகேஸ்வரி என்ற நபரை பிடிக்கிறார். அவர் போலி ஆவணங்கள் மூலம் வேலைக்கு சேர்ந்த நபர் ஆவார். அதனால் 1992ல் உதவி ஆய்வாளர் பொறுப்பில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பிறகு பழங்குடி மக்களுக்காக தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறி, மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கடைசியாக அவர், ருத்திராட்ச மாலை, கருகமணி விற்பது போன்று விஐபிக்களுக்கு சட்டத்திற்கு விரோதமான வேலைகளை செய்து கொண்டிருந்தார். மகேஸ்வரியை, கோவில் பூசாரி வனராஜாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருக்கு கூடுதல் டிஜிபி ஜெயராம், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகநாதன் ஆகியோர் நன்றாக பழக்கம் உள்ளது. அப்போது, இந்த பிரச்சினையை அவர்கள் இருவரிடமும் சொல்கிறார்கள். பின்னர் வனராஜ், மகேஸ்வரி ஆகியோர் மதுரையில் இருந்து பூந்தமல்லி வந்து ஒரு ஓட்டலில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு தனுஷையும், அந்த பெண்ணையும் பிரிப்பது குறித்து திட்டம் போட்டுள்ளனர்.
அந்த சந்திப்பின் பெயரில் ஏடிஜிபி ஜெயராமனின் கார் உள்ளிட்ட 2 கார்களில் மகேஸ்வரி, வனராஜா, எம்எல்ஏ பூவை ஜெகநாதனின் வழக்கறிஞர் சரத்குமார், அவரது நண்பர்கள் 2 பேர் என 5 பேர் நள்ளிரவு 12.50 மணிக்கு அந்த ஊருக்கு செல்கிறார்கள். அங்கு செல்கிறபோது தனுஷும், அந்த பெண்ணும் அங்கே இல்லை. தனுஷின் தாயார் லட்சுமி, அவரது 17 வயது தம்பி அங்கே இருக்கிறார். அவர்கள் தனுஷ் உள்ளிட்ட இருவரும் இருக்கும் இடத்தை காட்ட சொல்லி சிறுவனை காரில் ஏற்றிச் செல்கிறார்கள். காவல்துறை வாகனம் வந்திருப்பதால் அவர்களும் சிறுவனை அனுப்பி வைத்தனர். இருந்த போதும் தனுஷின் தாயார், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.
சிறுவனை அழைத்துக்கொண்டு அவர்கள் பூந்தமல்லி சென்றனர். அதன் பின்னர் அந்த பையனை அதிகாலை 3 மணி அளவில் கொண்டு வந்து பக்கத்து ஊரில் இறக்கி விட்டு சென்றார்கள். இதனிடையே, தனுஷின் தாயார் லக்ஷ்மி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்தனர். மகேஸ்வரியிடம் விசாரிக்கிற போது எம்எல்ஏ-வுக்கு தொடர்பு உள்ளதாக அவர் சொல்கிறார். அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் எம்எல்ஏவை கைது செய்வதற்காக காவல் துறையினர் பூவை ஜெகன்மூர்த்தியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சேர்ந்து காவல்துறையினரை தடுத்துவிட்டனர்.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின்போது நீதிபதி வேல்முருகன், இருவரும் பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புடைசூழ பூவை ஜெகன்மூர்த்தி வந்த நிலையில், அவரை நீதிபதி கண்டித்தார். மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், ஏடிஜிபி ஜெயராமையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனால் சீருடையில் இருந்த ஏடிஜிபியை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் கிட்டத்தட்ட 20 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் மாலையில் அவரை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்தும், நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராமன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஜெயராமன் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால், மத்திய தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு அவர் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த முடிவை எடுக்கும். இந்நிலையில், தன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து, தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்தவர்கள் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தரத்திலான அதிகாரிகள் ஆவர். ஜெயராமன், உயர் அதிகாரி என்பதால் அவர் மீதான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுவாக சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபிதான் உத்தரவிடுவார்கள். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதராங்களாக சிசிடிவி காட்சிகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஏடிஜிபியின் கார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அவரது உத்தரவின் பேரில் 2 காவல்துறை ஓட்டுநர்களும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது. ஒரு ஏடிஜிபியின் காரை அவரது அனுமதி இல்லாமல் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியுமா? ஒரு காவல் ஆய்வாளரின் வாகனத்தை கூட, அவரது ஒப்புதல் இன்றி காவலர்கள் எடுத்துச்சென்று பயன்படுத்த முடியுமா? என்கிற கேள்வி எழுகிறது. தனது ஒப்புதல் இன்றி கார் எடுத்துச்செல்லப்பட்டதாக தற்போது சொல்கிறார். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. சிசிடிவி காட்சிகளை மாற்ற முடியாது. செல்போன் அழைப்பு விவரங்களை மாற்ற முடியாது.
அன்றைய தினத்தில் கார் ஓட்டிய காவலர்களை நிச்சயமாக விசாரிப்பார்கள். அப்படி விசாரிக்கும் போது உண்மை தெரியவரும். சிபிசிஐடி விசாரணை என்று வருகிறபோது, இந்த வழக்கை விசாரிப்பதற்காக எஸ்.பி. அல்லது டிஎஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பார்கள். அந்த குழு இந்த வழக்கை மட்டும் தான் முழுமையாக விசாரிக்கும். சிறுவன் கடத்தல் விவகாரத்தில் விரிவான விசாரணைக்கும், தெளிவான விசாரணைக்கும் இது வழிவகுக்கும். அன்றைக்கு நல்ல வேளையாக தனுஷும், அந்த பெண்ணும் அவர்களின் கைகளில் மாட்டவில்லை. அப்படி அவர்களின் கைகளில் மாட்டி இருந்தால், வேறு விதமாக நடந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.