பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் ஒப்புக்கொண்ட பிறகு திராவிடம் உண்டா? இல்லையா என கேள்வி எழுப்ப இஙகு யாருக்கும் உரிமை இல்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாவலரேறு பெருஞ்சித்திரானாரின் நூல் வெளியீட்டு விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன் இங்கே ஆவேசத்துடன் பேசியுள்ளார். விமர்சனங்கள் அரசு மீதோ, தலைவர்களின் மீதோ வைப்பது ஒன்றும் புதிதானது அல்ல. அதற்கு பாவலரேறுவை விட சிறந்த உதாரணத்தை நான் பார்த்தது இல்லை. தந்தை பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னார். இந்த தமிழ்ச் சமூகத்தை உதிக்கவைத்த தலைவர்தான் பெரியார் என்று தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர்தான் பெருஞ்சித்திரனார். ஆனால் பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன உடன் துணிச்சலோடு எழுதினார். சமூக விடுதலைக்கும், சாதி ஒழிப்புக்கும், தமிழ் சமுதாயத்திற்கு தலைவர் அவர்தான் பெரியார், மொழி ஆராய்ச்சியில் அவர் சிறியார் என்று எழுதினார். எழுதிய பெருஞ்சித்திரனாரை பார்த்து பெரியார் கோபித்துக் கொள்ளவில்லை. பெரியாரை இப்படி சொல்லிவிட்டோம் என பெருஞ்சித்திரனாரும் நினைக்கவில்லை. சொன்னவர் வருத்தப்படாமலும், தாக்கப்பட்டவர் கோபித்துக்கொள்ளாமலும் விமர்சனத்தை சொல்லக்கூடிய அளவுக்கு வேல்முருகனுக்கு திறமை இருக்குமானால் அதை செய்யுங்கள் என்றுதான் சொல்லுகிறேன்.
தனித் தமிழ்நாடு தீர்மானத்தை கொண்டுவந்தவர் பெருஞ்சித்திரனார். அதே காலகட்டத்தில் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதி. மாநில சுயாட்சி என்பது தமிழர்களின் விடுதலைக்கு ஒவ்வாது என்று தீர்க்கமாக எண்ணியவர் பெருஞ்சித்திரனார். ஆனால் அவரிடம் கேள்வி எழுப்பியபோது இன்றைய தமிழர்களின் தலைமைக்கு இவரை விட்டால் வேறு தலைவர் இல்லை என்றார். விமர்சனங்கள் நியாயமானதாகவும், கூர்மையானதாகவும் வரும்போது அதை ஏற்றுக்கொள்கிற மனச்செம்மை படைத்தவர்தான் இன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏதாவது இடைவெளி இருக்குமானால் நிச்சயமாக உங்களுடைய கருத்துக்களை முதலமைச்சரிடம் எடுத்துச்செல்வேன்.
பெருஞ்சித்திரனார் சிந்தனை மரபு, பாவாணர் சிந்தனை மரபு என்பது தனித்தமிழ்நாடு. இன்று அவரது நூல்கள் வெளிவரும் நேரத்தில் தனித்தமிழ் நாட்டிற்காக அவர் எடுத்துவைத்த வாதங்கள், எவ்வளவு தூரம் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம், எவ்வளவு தூரம் வெற்றி பெற போகிறோம் என்பது தான். தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்ட பின்னர் எண்ணித் துணிக கருமம் என்ற நூலை அண்ணா எழுதினார். அதனை கலைஞரிடம் கொடுத்து முரசொலியில் பதிப்பிக்க செய்தார். காரணங்கள் அப்படியே உள்ளன. காரணங்களை படிப்படியாக அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நாம் வெற்றி பெற முடியுமா? என்று விரும்பியவர் அண்ணா. அதனை ஓரளவுக்கு நிறைவேற்றி காட்டியவர் கலைஞர். இன்னும் மாநில சுயாட்சி முழுமையாக கிடைத்துவிட வில்லை. இன்று ஒன்றியத்தில் உள்ள அரசாங்கம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான அரசாங்கமாகும்.
நாங்கள் தனித்தமிழ்நாடு கேட்காமல் இருக்கலாம். நாங்கள் பிரிவினை கேட்கவில்லை. ஆனால் நாங்கள் பிரிந்துதான் இருக்கிறோம். நீட் நுழைவுத்தேர்வை நாடாளுமன்றம் ஒப்புக்கொண்டது.ஆனால் தமிழ்நாடு சட்டமன்றம் நீட் தேர்வை தவறு என்கிறது. விஸ்வகர்மா திட்டம் கொண்டுவருகிறார்கள். நாஙகள் 1952-லேயே குலக்கல்வி முறையை எதிர்த்துவிட்டோம். 70 வயது முதியவருக்கு முடியாவிட்டால் அவருக்கு உதவி செய்யலாம். ஆனால் 15 வயது முடிந்த, 10 வது படித்து முடித்த சிறுவர்களை குல தொழிலை செய் 5 லட்சம் நிதியுதவி வழங்குகிறேன் என்கின்றனர். இந்த திட்டத்தை இந்தியா முழுக்க உள்ள முதலமைச்சர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடியாது என்றார்.
சாதி ஒழிப்பிற்காக அரசியலமைப்பு சட்டத்தை கொளுத்திவிட்டு சிறை சென்ற பெரியாரை இன்று கொச்சைப்படுத்துகின்றனர். திராவிடம் என்ற சொல்லே சிலருக்கு புளிக்கிறது. திராவிடம் என்ற சொல் எந்த மரபு சிந்தனைக்கு எதிரானது. பெரியார் இன்னொரு மொழிக்காரர் கொண்டுவந்துவிட்டனர். அப்போ தனித்தமிழுக்கு அத்தாரிட்டி மறைமலை அடிகளார். தனித்தமிழர் இயக்கத்துக்கு அத்தாரிட்டி பாவாணரும், பெருஞ்சித்திரனாரும் ஆவர். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் 1967ல் அவர் பிரிவினையை நோக்கி தள்ளப்படுகிறோம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் தென்னக திராவிட குடும்பத்தில் பிராமணர்களின் வல்லான்மை மொழி அளவிலும், இன அளவிலும் இரண்ற கலந்து நிற்பதாக தெரிவித்துள்ளார். மலையாளம், கன்னடம், தெலுங்கு மலையாளம் முதலியவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கினால் எஞ்சிய பகுதிகள் எல்லாமே தமிழ் மொழியாகவே ஒலிவிடுவதை எவரும் மறுத்தோ, தடுத்தோ விட முடியாது. திராவிட மொழி பெயரிட்டு கூறுவதை எந்த பிராமணனும், வடவனும் ஒப்புக்கொள்ள மாட்டான் அவர்கள் சட்ட அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்ற இன மரபை பாவாணர் ஒப்புக்கொண்டாரா என்றால் ஒப்புக்கொண்டார். அம்பேத்கர் திராவிடம் குறித்து என்ன கருத்தை சொன்னாரோ அதை அப்படியே ஒப்புக்கொண்டார். பாவாணர் ஒப்புக்கொண்ட பிறகு, பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒப்புக்கொண்ட பிறகு திராவிடம் உண்டா? இல்லையா? என்று கேட்கிற உரிமை இந்த மண்ணில் எவனுக்கும் கிடையாது. தமிழ்நாட்டில் அருந்ததியர்கள், நாயுடுக்கள், கன்னடம் பேசுபவர்களை தமிழர்கள் இல்லை என்கின்றனர். இவர்களுக்காக தான் பெருஞ்சித்திரனார் அன்றே சொன்னார் தெலுங்கு, கன்னடம் எனது பாட்டி மொழி என்று. அவர்களும் தமிழர்கள் தான். அவர்கள் இங்கேயே தங்கி தமிழர்களாக மாறிவிட்டார்கள். உணர்வால் தமிழர்கள், ஒரு மொழி கூடுதலாக பேசுகிறார்கள். இவர்களுக்கு எதிராக கருத்து சொல்லப்படுமேயானால் அப்படி சொல்பவர்கள் கருத்துக்குருடர்கள் ஆவர். அவர் யாரை சொல்கிறார் என்று தெரிகிறதா?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.