spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆபரேஷன் சிந்தூர்: உண்மையும், பின்னணியும்! மருதையன் நேர்காணல்!

ஆபரேஷன் சிந்தூர்: உண்மையும், பின்னணியும்! மருதையன் நேர்காணல்!

-

- Advertisement -

காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வைத்து இந்தியாவுக்கு தலைவலி கொடுப்பதே பாகிஸ்தான் அரசின் நோக்கம். அதற்காகவே காஷ்மீர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் பின்னணி மற்றும் அதன் விளைவுகள் குறித்து இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் கூறியுள்ளதாவது:- பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்டு உள்ள விளக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், தீவிரவாதிகளின் 9 நிலைகளை தேர்வு செய்து தாக்குதல் நடைபெற்று உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே புல்வாமா தாக்குதலையொட்டி பாலகோட்டில் நடைபெற்ற தாக்குதலை போன்று தற்போது தாக்கியுள்ளனர். இதில் முப்படைகளும் ஈடுபட்டதாகவும், ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முகாம்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் முக்கிய நபர்கள் யாரும் கொல்லப்படவில்லை.

பகல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதன் காரணமாக மத்திய அரசின் மீது மக்கள் கோபம் கொண்டிருந்தனர். அதற்கு இந்த அரசு எந்த பதிலும் சொல்ல வில்லை. பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இன்னும் பிடிக்க வில்லை. தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவின் கருத்துப்படி, அவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள். பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். அதற்கு அடிப்படையாக இருந்த முகாம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. அவர்கள் அடித்ததற்கு பதிலடியாக நாமும் அடித்து விட்டோம். இதனால் பிரச்சினை தீர்ந்துவிட்டதா? இதன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதா? கொல்லப்  பட்டவர்களுக்கு நீதி கிடைத்து விட்டதா? ஆபரேஷன் சிந்தூர் மூலம் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துவிட்டோம் என்பதுதான் மோடி அரசு இந்திய மக்களிடம் உருவாக்க விரும்பிய கருத்து. அதுதான் தற்போது நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தான் அரசு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்தார்கள். மும்பை தாக்குதலை அவர்கள் தான் நடத்தினார்கள். முன்பு செய்திருக்கலாம். தற்போது நாங்கள் செய்யவில்லை என்கிறார்கள். அவர்கள் தான் தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கான ஆதாரத்தை இந்திய அரசு இதுவரை கொடுக்கவில்லை. அதனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா. சபை உட்பட தீவிரவாத தாக்குதலை கண்டித்தனரே தவிர, பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. ஆதாரம் இல்லாதபோது இதுபோன்ற தாக்குதலை நடத்தி போரை நோக்கி கொண்டுசெல்வது எந்த வகையில் நல்லது என்று யோசிக்க வேண்டும். தாக்குதல் குறித்து பெண் ராணுவ தளபதிகளை வைத்தே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்கள். இது தேர்தல் அரசியல் நோக்கத்தில் நடைபெற்ற செயலாகும். இதில் பிரச்சினைக்கு நீதி கிடைப்பதற்கான வழி இல்லை.

இந்த போர் மேலும் விரிவடையாது என்று இந்திய ராணுவம் சொல்லியுள்ளது. பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லியுள்ளார். அப்படி நிறுத்திக் கொண்டால் நல்லது. மீறினால் இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை என்பது நாம் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பதாகும். பிறர் தாக்கினால் பதிலடி கொடுப்போம். பாகிஸ்தானின் அணு ஆயுதக் கொள்கை என்பது தங்கள் நாட்டிற்கு வரக்கூடிய நீரை தடுத்தாலோ, துறைமுகங்களை சுற்றி வளைத்தாலோ, தங்களுடைய நிலப்பகுதியில் ஆக்கிரமிப்பு நடைபெற்றாலோ, அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்பதாகும். ஒரு போர் இப்படி தொடங்குகிற போது, அது எங்கே போகும் என்று சொல்ல முடியாது. அதனால் பொருளாதார பாதிப்புகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதோடு நின்றுவிட்டால் நல்லது. நாம் எதை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் என்றால்? பகல்காமில் நடந்தது என்ன? அது ஏன் நடைபெற்றது? அந்த தவறுக்கு யார் காரணம்? என்று யோசித்தால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்கிறது என்பது உண்மை. குறிப்பிட்ட பஹல்காம் விஷயத்தில் உள்ளதா? என்பது தெரியவில்லை. காஷ்மீர் மக்களுக்கு விடுதலை வாங்கித்தருவது அவர்களின் நோக்கம் அல்ல. இலங்கை அரசை கட்டுப்பாட்டிற்குள் வைக்க ஈழப் போராட்டத்தை இந்தியா எப்படி பயன்படுத்திக்கொண்டதோ, அதுபோல இந்தியாவுக்கு தலைவலியை கொடுப்பதற்காக  காஷ்மீர் மக்களின் போராட்டத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. இது கஷ்மீரில் உள்ள மக்களுக்கும் ஓரளவுக்கு புரிகிறது.

காஷ்மீர் மாநிலம் பாதி இந்தியாவிடமும், பாதி பாகிஸ்தானிடமும் உள்ளது. தற்போது தமிழ்நாட்டை 2 நாடுகளாக பிரித்துக்கொண்டு இரு பக்கமும் மாறி மாறி குண்டுகளை போட்டால் உயிரிழப்பவர்கள் தமிழர்கள் தானே. அதுதான் தற்போது காஷ்மீரின் நிலையாகும். தற்போது இவர்கள் குண்டு போட்டதில் இறந்தவர்களும் காஷ்மீர் மக்கள் தான். பாகிஸ்தான் குண்டு போட்டதில் இறந்தவர்களும் காஷ்மீர் மக்கள்தான். நடுவில் காஷ்மீர் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ