ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது. ஆனால் அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்களது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடுத்துள்ள தாக்குதல் குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- நீதித் துறையின் மீது பாஜக – ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் தாக்குதல் நடத்துவது இன்று நேற்று அல்ல தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்தார். அவர் வந்த உடன் நிறைவேற்றிய முதல் சட்டம் நீதிபதிகள் நியமனத்தில் பிரதமர், சட்ட அமைச்சர் ஆகியோர் தான் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று சட்டம் கொண்டுவந்தனர். 2015ஆம் ஆண்டில் அந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. கொலிஜியத்தில் நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், இவர்கள் சொல்லும் வழிமுறையும் சரியில்லை என்பதுதான் அன்றைக்கு எல்லோரும் சொல்லியது. அந்த தீர்ப்பை அன்றைய மத்திய சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் சர்வாதிகாரம் என்று விமர்சித்தார். இதே குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், 2022ல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது 2015 தீர்ப்பை சுட்டிக்காட்டி நாடாளுமன்றம் பெரியதா? உச்சநீதிமன்றம் பெரியதா? என்றால் நாடாளுமன்றம் தான் பெரியது என்றார். அதனால் உச்ச நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்ச்சியானது தான்.
தேர்ந்தெடுக்கப்பாடதவர்களின் சர்வாதிகாரம் என்றால் குடியரசுத் தலைவரை யார் தேர்வு செய்தது. ஆளுநரை யார் தேர்வு செய்தது? தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்ட மசோதாக்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் நிறுத்தி வைத்திருப்பது சர்வாதிகாரமா? இல்லையா? நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழ்நாடு சட்டம் நிறைவேற்றி அனுப்பி வைத்துவிட்டனர். இன்றைக்கு அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. குடியரசுத் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? நாடாளுமன்ற முறை அரசு என்றால் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தான் அதிகாரம் உள்ளது. ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் என்றால்? வெள்ளையர்களின் ஆட்சியையே வைத்திருக்கலாமே? எப்படி மக்களாட்சி என்று சொல்ல முடியும். பிரிட்டிஷ் வைசிராய்க்கு இருந்த முழுமையான அதிகாரங்களும், அரசியலமைப்பு சட்டம் வந்த பிறகு எடுத்துவிட்டார்கள். இன்றைக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு மட்டும் அதிகாரம் இருக்கக்கூடிய நிலையில், குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சட்டத்தை வருடக் கணக்கில் பதில் அளிக்காமல் வைத்திருந்து நிராகரிப்பது சர்வாதிகாரம் இல்லையா?
ஜுடிசியல் ரிவியூ என்பது ஒரு அரசியலமைப்பு அதிகாரம் ஆகும். ஒரு சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதா? இல்லையா? என்று பார்க்கக்கூடிய அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் உள்ளது. எத்தனையோ சட்டங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மிர் விவகாரத்தில் பாஜக செய்தவை அனைத்தும் அட்டுழியம். அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்தது. அதை சர்வாதிகார நடவடிக்கை என்று மற்ற கட்சிகள் விமர்சிக்கலாமா? இன்றைக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரைமுறை இல்லாமல் போவதாகவும், இது பெரிய பிரச்சினைக்கு வழி வகுக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி வரிசையாக ஒவ்வொருவராக பேசி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் மறைமுகமாக ஆதரித்து பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். தற்போது வந்த ஆளுநர் வழக்கு தீர்ப்பு மட்டுமல்ல, ஏற்கனவே நீதிபதிகள் நியமன விவகாரம், கேசவானந்த பாரதி விவகாரத்திலும் விமர்சித்துள்ளார்கள். இன்றைக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் நிற்கிறது என்றால்? அந்த தீர்ப்பின் காரணமாக தான் நிற்கிறது. இல்லாவிட்டால் பாஜக என்றைக்கோ மாற்றி இருக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறுகளை, நாடாளுமன்றத்தில் மாற்ற முடியாது என்று சொன்னது தான் கேசவானந்த பாரதி வழக்கு. இல்லாவிட்டால் மதச்சார்பின்மை, மாநிலங்களுக்கான உரிமைகளை எடுத்திருப்பார்கள்.
அந்த வரிசையில் ஆளுநர் Vs தமிழ்நாடு வழக்கு ஒரு முக்கியமான வழக்கு. அதனால் இதன் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு முரண்பாடாக இருக்கக்கூடிய அரசியல் சட்டத்தை சரியான கண்ணோட்டத்தில் சொல்லக்கூடிய எந்த தீர்ப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேசமயம் நீதிமன்றங்கள் பல தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளது அதை விமர்சிக்க வேண்டும். ஆனால் சரியான தீர்ப்பு கொடுக்கும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். உள்நோக்கத்தோடு பாஜக அவர்களை தாக்கும்போது, அதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். கபில் சிபல் அதுபோல பேசியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீதித்துறையையே இந்த அளவுக்கு மிரட்டுகிறார்கள் என்றால்? பாஜக மற்றவர்களை எப்படி நடத்தும் என்கிற கேள்வி எழுகிறது.

இதனை விளக்கித்தான் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் இந்தியா என்ற நாடு மாநிலங்களின் ஒன்றியம் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை வலுவாக்குகிறது. மூன்றாவதாக தமிழ்நாடு அரசின் அணுகுமுறையாகும். ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு மசோதா உள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாக்களும் உள்ளது. அவை அனைத்தையும் சேர்த்துதான் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இவை அனைத்துக்கும் சேர்த்துதான் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அணுகு முறை வெற்றி பெற்றுள்ளது என்று பிடிஆர் தெரிவித்துள்ளார். ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று சொல்லியுள்ளார். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுத்ததற்கு ஒரு தீர்வாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது இந்தியாவை ஒற்றுமைப்படுத்துகிற விஷயம் என்றும் அவர் சொல்லியுள்ளார்.
ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானதாகும். அதை அமித்ஷா, மோடி பார்த்துக்கொள்வார். குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு அரசியல் சட்ட ரீதியாக என்ன பணி வழங்கப்பட்டு உள்ளதோ அதை செய்தால் போதும். அதை தாண்டி பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜெண்டாவுக்கு வேலை பார்க்க வேண்டாம். அவர்களுக்கு மாநிலங்களே இருக்கக் கூடாது. அதை செயல்படுத்த தான் ஒரே நாடு ஒரே தேர்தல். ஒரே நாடு ஒரே பண்பாடு போன்றவை எல்லாம். தமிழ்நாடு ஆளுநர் ஒரு தபால்காரர் என்பதில் எந்த தவறும் கிடையாது. பல்கலைக் கழகங்களில் அவர் ஆடிய ஆட்டம் என்ன? சேலம் பெரியார் பல்கலை.யில் துணை வேந்தரும், பதிவாளரும் நேரடியாக அரசுக்கு எதிராக வேலை பார்த்தார்கள். ஆளுநர்தான் பின்னால் இருந்து இயக்கினார். இன்றைக்கு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் புடுங்கிவிட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.