சீமான் தமிழக மக்கள் மட்டுமின்றி ஈழ மக்களையும் ஏமாற்றி வந்ததாகவும், அவர்களும் தற்போது சீமான் யார் என புரிந்துகொள்ள தொடங்கி விட்டனர் என்றும் பேராசியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் புகைப்பட சர்ச்சை தொடர்பாக யூடியூப் சேனலுக்கு சுப.வீரபாண்டியன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- சீமான் குறித்த அமைச்சர் துரைமுருகனின் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுவரை சீமானை ஒரு பொருட்டாக திமுக கருதுவது இல்லை. இன்று சில உண்மைகளை சொல்ல வேண்டும் என்று கோபத்தில் வந்த வார்த்தைகளாக தான் அதை பார்க்கிறேன். சீமான் பல நேரங்களில் இதுபோன்று பேசியுள்ளார். எனவே அவரது பாணியிலேயே பதில் அளிக்க துரைமுருகன் நினைத்தாரா என்பது தெரிய வில்லை. ஆனால் திமுகவினர் சீமான் அளவுக்கு தரம் தாழ்ந்துவிடக்கூடாது. அடாவடி தனத்தை வீரம் என்பது போல காட்ட முயற்சிக்கிறார். அவருடைய பேச்சு செயற்கையானது. இயல்பாக மனதில் இருந்து பேச்சு வரும்போது இது போன்ற உடல் பாவனைகள் வராது.
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை அவர் அரசியலுக்கு பயன்படுத்தியபோது ஒரு நல்ல விஷயத்திற்காக அதனை வெளியே சொல்ல வேண்டாம் என கூறியதாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். நல்லதற்காக கூட தவறுகள் செய்வதை ஏற்கக்கூடாது. சாதாரண நபர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பது தவறு இல்லை. பிரபாகரன் போன்ற உலகம் அறிந்த தலைவர்களுடன் புகைப்படத்தை ஒட்டி சேர்த்து என்பது அடிப்படையில் மிகவும் தவறானது. இந்த புகைப்படத்தை வைத்து சீமான் இவ்வளவு அரசியலில் ஈடுபடுவார் என்று அவருக்கு தெரியாது. இயக்குநர் ராஜ்குமார் ஒன்றை நேர்மையாக சொல்கிறார். சீமான், பிரபாகரனை சந்தித்தாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்த படம் போலியானது. நான்தான் அதனை ஒட்டினேன் என்று கூறுகிறார்.
இந்த இடத்தில் மற்றுமொரு அதிர்ச்சியான தகவலை சொல்கிறேன். ஈழத்தில் பிரபாகரனுடன் களத்தில் இருந்தவர்களிடம் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. அவர்களின் பெயர்களை சொல்ல முடியாது. அதில் சோவும், குருமுர்த்தியும் தான் நாம தமிழர் என்ற பெயரை சீமானுக்கு வாங்கி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து வருந்தினோம். காரணம் நாங்கள் சீமானை நம்பினோம். தன் காலம் முழுவதும் புலிகளை இழிவாக பேசியவர் சோ. அவருக்கும், சீமானுக்கும் தொடர்பு இருக்கிறது. பின்னர் பெயரை வாங்கிக் கொடுத்தவர்களே அவர்கள்தான் என்றும், அந்த பெயரை வைத்து எங்களுக்கு ஆதரவாக பேசுவதாக சொல்கிறார். அப்படி என்றால் எங்களுக்கே சீமான் மீது குழப்பமாக உள்ளது என்று தெரிவித்தனர்.
எனவே சீமான் தமிழ்நாட்டு மக்களை மட்டும் ஏமாற்றவில்லை. ஈழ மக்களையும்தான் ஏமாற்றியுள்ளார். பெரியாரை மட்டும் இழிவுபடுத்தவில்லை. பிரபாகரனையும் சேர்த்துதான் இழிவுபடுத்தியுள்ளார். போராளிகளை பார்க்கும்போது போர்க்களம் குறித்து, அவர்களது தொலைநோக்கு திட்டங்கள் குறித்து, நுட்பங்கள் குறித்து எதுவும் பேசவில்லை. எனக்கும், அண்ணனுக்கும் சாப்பாட்டில் போட்டி ஏற்படும். என்ன வேண்டும் என கேட்டபோது சமையலர் வேண்டும் என கூறினேன் என்பது புலிகளையும், அவர்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. என்னிடம் கலைஞர் பற்றி கேட்டல், நான் அவரது பெருமைகளை தான் பேசுவேன். ஆனால் சீமான் பிரபாகரனை சிறுமைப்படுத்தும் விதமாக தான் பேசியுள்ளார். ஈழ மக்களுக்கும் சீமான் யார் என்று புரிய தொடங்கியுள்ளது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடன், சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது என்று சொல்வது மிகவும் அதிர்ச்சியானது. சீமானுடன் மிகவும் நெருக்கமாக இருந்த மறைந்த கலைக்கோட்டுதயம் ஒரு முக்கிய தகவல் என்னிடம் சொன்னார். சீமானுக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் இருந்து அனைத்து உதவிகளும், நம்பிக்கை வருகிறது. வெளிப்படையாக சொல்வது என்றால் அவர்கள் முன்பு சரத்குமாரை நம்பினார்கள், இப்போது சீமானை நம்பி சிலவற்றை செய்ய முற்படுகிறார்கள் என்றார். இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டபோது நானும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்தான் என்று கலைக்கோட்டுதயம் கூறினார். அப்போதுதான் சீமான் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர், கலைக்கோட்டுதயம் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் என்று தெரிந்தது. இதற்கு பின்னால் சாதிய பின்னணி உள்ளது. மோசடி திட்டம் உள்ளது. புலிகளை பயன்படுத்திக்கொண்டு தான் இந்த இடத்தில் காலூன்ற வேண்டும் என சீமான் நினைத்துள்ளார்.
ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக, விஜய் கட்சியின் வாக்குகள் சீமானுக்கு விழாது. ஏனென்றால் பெரியாரை இந்த இரு கட்சிகளும் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அங்கு அருந்ததியர் மக்கள் வாக்குகள் குறிப்பிட்ட அளவு உள்ளது. எனவே சீமானுக்கு உள்ள வாக்குகள், பாஜக வாக்குகள் மற்றும் திமுகவை பிடிக்காதவர்கள் அளிக்கும் வாக்குகள் வரலாம். இதனை நான் தனியாக நின்று பெற்ற வாக்குகள் என்று பீற்றிக்கொள்ளலாம். இது 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடரும். திமுகவுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையே கருத்தியல் ரீதியாக பேசினால், நாமும் விடை அளிக்கலாம். ஆனால் கருத்தியலாக பேசும் ஒருவன், பெரியார் சொல்லாததை எல்லாம் அவர் சொன்னதாக சொல்ல மாட்டான். சீமான் சொல்லும் எந்த இடத்தில் சொல்கிறார் என ஆதாரம் கேட்கிறோம். ஆனால் காட்டவில்லை. தாயுடனுடம், சகோதரியுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று பெரியார் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்கள் 1953 விடுதலையை எல்லோரும் வெளியிட்டு விட்டார்கள். ஆனால் எந்த இடத்திலும் அப்படி இல்லை. ஒரு குற்றச்சாட்டு வைக்கிறோம் என்றால் அதனை சொல்பவர்தான் ஆதாரத்தை காட்ட வேண்டும். எனது குற்றச்சாட்டுக்கு நீ ஆதாரம் காட்டு என்பது மோசடி. அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதற்கு இந்த பட விவகாரம் ஒரு சான்று.
பிறர் மனைவியுடன் உறவு வைத்திருப்பது குற்றமாக கருதக்கூடாது என்று தீர்மானம் போட்டதாக கூறுவது உண்மை இல்லை. அது ஒரு பெண்ணுக்கான உரிமையாக சொல்லப்பட்டதுதான் அது. மண முறிவு என்ற ஒன்று நினைத்துக்கூட பார்க்க முடியாத காலகட்டத்தில் வந்தது அது. ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துகிறார், அவளுக்கு கணவர் மீது விருப்பம் இல்லை என்றால் அவனை எறிந்துவிட்டு விரும்புகிற ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக தான் அந்த தீர்மானத்தின் பொருள் இருந்தது. அது வந்து பெண் அடிமைத்தனத்தை மீட்பதற்காக அவர் சொன்னதுதான். எல்லாவற்றையும் திரித்து திரித்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.