எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக திமுகவுக்கு 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கணித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி உடையாமல் அப்படியே இருக்கும். ஏனெனில் அக்கூட்டணியில் உள்ள யாருக்கும் இன்னொரு கட்சியை ஜெயிக்க வைக்கும் பலம் இல்லை. தனித்தனியே திமுக 25%, காங்கிரஸ் 4%, விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் தலா 1% வாக்குகள் என்று தான் இருந்தனர். அனைவரும் சேர்ந்து மொத்தம் 33% வாக்குகள்தான் உள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தலில் 53% ஆகவும், சட்டமன்ற தேர்தல் 45.5% ஆகவும் அதிகரித்தது. 2024 மக்களவைத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் போல தான் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் தலைமைக்கு 47% சதவீத வாக்குகள் கிடைத்தது. இதுதான் மக்களின் தீர்ப்பு. கடந்த தேர்தலில் ராகுல்காந்தி தலைமைக்கு 53 சதவீதம் கிடைத்தது. எதிரணிகள் திமுகவைதான் பிரதானமாக எதிர்த்தனர். அதனால் இது திமுகவுக்கு கிடைத்த வெற்றிதான். மக்களை தேர்தலில் கடும் போட்டி நிலவிய கோவை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஆனால் மற்ற இடங்களில் ஸ்டாலின் தான் முன்னிலை படுத்தப்பட்டார்.
2026 களம் என்பது திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணிக்குள் கூடுதலாக தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மு.க.ஸ்டாலின் கையில் தான் உள்ளது. தேமுதிக 2024 மக்களவைத் தேர்தலிலேயே திமுகவுக்கான கூட்டணி கதவை திறந்து வைத்திருந்தனர். ஆனால் திமுக இப்போது வேண்டாம் என இருந்தனர். தற்போது விசிக பிரச்சினை ஏற்பட்டபோது ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை மதித்து நடந்துகொண்டார். ஸ்டாலின் கூட்டணியை ஜோதிபாசு போன்று தான் நடத்திச்செல்கிறார். கலைஞர் ஸ்டைலில் நடத்திச் செல்லவில்லை. கலைஞர் வெற்றி பெற்ற அணியை தொடர மாட்டார். ஆனால் ஸ்டாலின் வெற்றி பெற்ற அணியை தொடருகிறார். அதனை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.
இதனை தாண்டி திமுக கூட்டணி கிருஷ்ணசாமி வர வாய்ப்பு உள்ளது. இன்னும் அந்த கட்சிக்கு கூட்டணி ஆப்ஷன் திறக்கவில்லை. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் வாக்குகளை பெற பாஜக, நாம் தமிழர் கட்சிகள் முயற்சித்து வரும் அதேவேளையில், அந்த சமூத்தலைவரான கிருஷ்ணசாமியை திமுக சின்னத்தில் நிற்க வைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்தவர்தான் அவர். அதிமுக மீது கிருஷ்ணசாமி அதிருப்தியில் உள்ளார். அருந்ததியர் உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடு அவருக்கு உடன்பாடு இல்லை. இதனால் கூட்டணி கட்சி கூட்டங்களில் பங்கேற்காமல் கிருஷ்ணசாமி இருந்து வருகிறார்.
தேமுதிக, அதிமுக கூட்டணியில் பலமாகதான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியும், கே.பி.முனுசாமியும் பிரேம லதாவுக்கு உரிய முக்கியத்துவம் அளித்தனர். விஜயகாந்த் குருபூஜையை பெரிய அளவில் நடத்தினர். இதற்கான முதல் அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்தான் வழங்கினர். குருபூஜையில் முதலமைச்சர் சார்பில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். மேலும், தேமுதிகவை வெற்றி பெற செய்வதற்கான பலம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அவர்களுக்கு வாய்ப்பு இருந்த ஒரே தொகுதி விருதுநகர். அந்த தொகுதியில் திமுக கூட்டணிதான் ஜெயித்தது. மற்ற தொகுதிகளில் தேமுதிகவை, அதிமுகவால் வெற்றி பெற வைக்க முடியாது. அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் பாமக, தேமுதிக இடையே நல்லுரவு இருக்குமா? என்பது சந்தேகமே. அந்த ஓட்டு டிரான்ஸ்பர் ஆகுமா என்பதும் சந்தேகமே. பாமக உள்ஒதுக்கீடு விவகாரத்தில் தேமுதிக எதிர்ப்பு தெரிவித்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் உள்ளது.
இந்த சூழலில் தேமுதிகவுக்கு 3 வாய்ப்புகள் உள்ளது. அக்கட்சி பாஜக, அதிமுக கூட்டணி செல்லும் வாய்ப்பு உள்ளது. இதையும் தாண்டி முதலமைச்சரை சந்தித்ததன் மூலம் திமுக ஆப்ஷனும் தற்போது ஓபன் ஆகியுள்ளன. பாமகவுக்கு, திமுக ஆப்ஷன் குளோஸ் ஆகிவிட்டது. கூட்டணியில் விசிக உள்ளதால் அவர்கள் வர முடியாது. ஆனால் திமுக கூட்டணிக்கு செல்வதற்கு பாமக முயற்சித்தது. திமுக கூட்டணியில் கூடுதலாக தேமுதிகவை சேர்த்தால், அந்த கூட்டணி நிறைவு பெற்றுவிட்டதாக கருதிவிடும். தேமுதிகவும் 2011 சட்டமன்றத் தேர்தலில் இருந்து வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சந்தித்த தேர்தல்களில் தேமுதிக வெற்றிபெற வில்லை. தேமுதிக மீண்டும் சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்றால் அவர்கள் திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும். ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், சுதீசுக்கும் இடையே குடும்ப ரீதியில் நல்ல உறவு உள்ளது. இது அரசியல் கூட்டணியாக மாறினால் வெற்றி கூட்டணியாக மாறும் வாய்ப்பு உள்ளது. கூட்டணி தொடர்பான திமுக தரப்பு நிபந்தனைளை ஏற்பதாக இருந்தால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கலாம் என ஸ்டாலின் நினைக்கிறார்.
அதேவேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியை விரும்பவில்லை. அவ்வாறு பாஜக உடன் கூட்டணி சேர்ந்தால் 13 சதவிகித கிறிஸ்தவ, முஸ்லீம் மக்கள் அதிமுகவுக்கு கிடைக்காது. பாஜக கூட்டணியில் சேராவிட்டால் அந்த வாக்குகள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும், தேர்தலை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளார். அதனால்தான் முஸ்லீம் சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் போடப்பட்டது. முபாரக் உடன் கூட்டணி அமைத்துள்ளார். அப்படி இல்லாமல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைந்தால் 18 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதால், பாதிக்கு பாதி இடங்களை அண்ணாமலை கேட்பார். அது ஏற்புடையதாக இருக்காது. எனவே பாஜக – அதிமுக கூட்டணி அமைய கிட்டத்தட்ட வாய்ப்பு இல்லை. பாஜகவும், அதிமுகவைவிட திமுகவுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதனால்தான் ராஜ்நாத்சிங், கலைஞர் நிகழ்ச்சிக்கு வந்தார்.
அதிமுக – விஜய் கூட்டணி அமையுமா? என்கின்றனர். முதலில் விஜய்க்கு பலம் என்ன. 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் நின்று ஜெயித்தால்தான் அவரது பலம் தெரிய வரும். எடப்பாடி, விஜய்க்கு சீட் கொடுத்தால் எடப்பாடியின் ஓட்டுதான் விஜய்க்கு செல்லும். ஜானகி அம்மாள், தேர்தலில் வலிமையை நிரூபிக்காத சிவாஜிக்கு சீட் வழங்கியதால் தோல்வியுற்றார். ஆனால் ஜெயலலிதா, 8 சதவீதம் வாக்குகள் பெற்று தேர்தலில் வலிமையை நிரூபித்த விஜயகாந்துக்கு சீட் வழங்கி முதலமைச்சர் ஆகினார். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகினார். கடந்த 2006ஆம் ஆண்டு விஜயகாந்துக்கு தேர்தலில் அதிகளவு சீட் கொடுக்க ஜெயலலிதா மறுப்பு தெரிவித்தார். அந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபித்த வைகோவுக்கு தான் அதிக இடங்களை வழங்கினார். விஜயகாந்த் தேர்தலில் நின்று 8 சதவீத வாக்குகளை பெற்ற பின்னரே அவருக்கு அதிக இடங்களை வழங்கினார்.
இதேபோல், பலம் நிரூபிக்காத ஒருவருக்கு அடையாள அரசியலுக்காகவும், அவர் சார்ந்த சமுதாயத்திற்காகவும் 12 இடங்களுக்கும் மேல் யாரும் தரமாட்டார்கள். அதையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு அதிக இடங்களை வழங்கினார் என்றால் ஜானகி அம்மாளுக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும் ஏற்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளுக்கும் மேலாக பெற்றுவிடுவார்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடுவார்கள். காமராஜர் 45 சதவீத வாக்கு சதவீதத்துடன் 1957, 1962ஆம் ஆண்டுகளில் இருந்தது போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி பலத்தோடு, இன்னும் கூட்டணியை பலப்படுத்தினால் அதைவிட சிறப்பாக இருப்பார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.