தமிழ்நாட்டில் கூட்டணி கணக்குகள் மாறினாலும் திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாற்றம், திமுக மீது அன்புமணி முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பொதுவாக கூட்டணிகள் என்பவை மாறுதலுக்கு உட்பட்டவைதான். அதில் இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. ஒன்று தொகுதி பங்கீடு. மற்றொன்று எந்த தொகுதியை யாருக்கு கொடுப்பது என்று முடிவு செய்வதாகும். அது மிகவும் கடினமான பணியாகும். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் பாமக, விசிக போன்ற கட்சிகளுக்கு சில குறிப்பிட்ட தொகுதிகளில் தான் நல்ல வேட்பாளர்கள் இருப்பார்கள். அங்குதான் வெற்றி வாய்ப்பு இருக்கும். எனவே அந்த தொகுதிகளை அவர்கள் கேட்பார்கள்.

எப்போதும் எந்த கூட்டணிக்கும், இந்த இடம் கடினமானதாகும். இதை தாண்ட வேண்டும். அதனால்தான் எப்போதும் கூட்டணியை கடைசியாக வைத்துக்கொள்வது. அதாவது தேர்தலுக்கு சற்று முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும். தற்போது ஏன் முன்கூட்டியே கூட்டணி தொடர்பாக பேசப்படுகிறது என்றால் , கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டதுதான். அப்போது கூட்டணி தொடர்பான எல்லா பேச்சுக்களும் பெரிதாக பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்த நிகழ்வு பாமகவில் ஏற்பட்ட பூசல். அது இந்த பேச்சுக்களுக்கு எல்லாம் வலு சேர்த்தது.
தற்போதைய நிலை என்ன? அதிமுக – பாஜக கூட்டணி உள்ளது. இதில் பாஜக அவர்களது வாக்கு வங்கியை உறுதிபடுத்தும் செயலில் இறங்கியுள்ளனர். முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். இந்த கூட்டத்திற்கு எடப்பாடியோ, அல்லது அதிமுக முன்னாள் அமைச்சர்களோ செல்வார்களா? என்பது தெரியாது. ஆனால் இதுபோன்ற வாக்கு வங்கி அதிமுகவுக்கு சரிபட்டு வராது. அதனால் முடிந்த வரைக்கும் அவர்கள் விலகிதான் இருப்பார்கள். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அரசியல் சாயம் விழுகிறபோது, ஆன்மீக மாநாட்டிற்கு அது இடைஞ்சல் ஆகும். அடுத்து சிக்கந்தர் மலை சர்ச்சையை, திருப்பரங்குன்றம் மக்களே விரும்புவது இல்லை. எனவே முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவின் பங்கு குறைவுதான். பாஜக மட்டும் அடித்து ஆடுகிறது. அதற்கு காரணம் அவர்கள் புதிய வாக்கு வங்கியை உருவாக்கி, அதை பாஜக வாக்கு வங்கியாக எடுக்க முயற்சிக்கிறார்கள். மத்திய அமைச்சர் முருகன் வேல்யாத்திரை நடத்தினார். அதற்கு உடனடியாக பலன் கிடைக்காது. போக போக வாக்குகள் கிடைக்கும் என்று பாஜகவினர் நினைக்கின்றனர்.
மருத்துவர் ராமதாஸ் வன்னியர்களின் அடையாளம் ஆவார். அப்படிபட்ட தலைவர்கள் என்ன செய்தாலும் அந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளும். அன்புமணியிடம் கட்சி, நிர்வாகிகள் இருக்கலாம். ஆனால் ராமதாசிடம் வன்னியர்களின் வாக்கு வங்கி உள்ளது. தற்போது ராமதாஸ், திமுக அணிக்கு வருவது போல நினைக்கிறார் என்று தோன்றுகிறது. திருமாவளவன், ராமதாஸ் பாமக என்றால் சரி. அன்புமணியின் பாமக என்றால் வேண்டாம் என சொல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதற்கு என்ன காரணம் என்றால் பாமகவின் பிளவுக்கு காரணமே திமுக என நிலைப்பாடு எடுக்கிறார். ராமதாஸ், அதை கடைந்தெடுத்த பொய் என்று சொல்கிறார். தலைவர்கள் என்றைக்கு கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்களோ, அதில் ஒரு மறைமுக அஜெண்டா இருக்கும். ராமதாஸ் கருத்துக்கு விசிக பொதுச் செயலாளர் ரவிகுமார் வரவேற்பு தெரிவிக்கிறார். அதன் மூலம் ராமதாஸ், திமுக அணிக்கு செல்கிறார். ஒருவேளை அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படும்பட்சத்தில் அன்புமணி இருக்கும் பக்கம் பாஜக. மருத்துவர் ராமதாஸ் இருக்கும் பக்கம் திமுக என்றாகிவிடும். அப்போது திருமாவளவனுக்கு சங்கடம் கிடையாது. வன்னியர்கள் செல்வாக்கு மிகுந்த இடங்களில் ராமதாசுக்குதான் வாக்கு வங்கி உள்ளது. அது திமுகவுக்கு தான் சாதகமாகும்.
இப்படி நடைபெறுவது பாஜகவுக்கு தான் இழப்பாகும். அதனால்தான் குருமூர்த்தியை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்கள். குருமூர்த்தி சமரசம் பேசுவதற்காக தான் சென்றார். ஆனால் அது எடுபடவில்லை. அதனால் விலகிக் கொண்டனர். ஆனால் பாஜக, ராமதாஸ் திமுகவை நோக்கி செல்வார் என்கிற நகர்வை எதிர்பார்க்கவில்லை. திமுகதான் பிளவை ஏற்படுத்துகிறது முதல் பால் போட்டது அன்புமணிதான். அன்புமணி அந்த பாலை போடாவிட்டால், ராமதாஸ் அடித்திருக்க மாட்டாரே. இதன் மூலம் திமுகவுக்கு சின்ன சின்ன வாக்கு வங்கிகளை எல்லாம் ஒருங்கிணைக்கலாம். நமது பலத்தை மட்டும் நம்பி தேர்தலில் வெற்றி பெற முடியாது. திமுகவின் பலம் என்பது 25 சதவீதம் தான் வரும். அப்போது சிறிய சிறிய வாக்கு வங்கிகளை எல்லாம் சேர்க்க வேண்டும். அதிமுகவின் கணக்கும் அதுதான். வன்னியர்களின் வாக்கு வங்கி என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உள்ளது. அந்த பகுதிகளில் வெற்றி பெறுவதற்கு அந்த வாக்கு வங்கி தேவையாகும்.
சேலத்திற்கு அன்புமணி பேசுவதற்காக செல்கிறார். உடனே 2 எம்எல்ஏக்களும் நெஞ்சுவலி என்று சொல்கிறார்கள். அவர் பேசி முடித்து சென்ற உடன் இருவருக்கும் சரியாகி விடுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு அடுத்த முறை எம்எல்ஏ சீட்டு கிடைக்குமா? என்கிற சந்தேகம் இருக்கும். அப்போது ஜி.கே.மணி, அருள் ஆகியோருக்கு அந்த பயம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. நம்ம தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால் ராமதாசின் ஆதரவு தங்களுக்கு வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால்தான் ராமதாஸ் மீட்டிங்கிற்கு செல்கின்றனர். அன்புமணியின் கூட்டத்திற்கு செல்வதில்லை. அதில் ஒரு அரசியல் கணக்கு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.