சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் தியாகத்தையும் பயன்படுத்துவது மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரிகேடியர் சூசை ஆடியோவை சுட்டிக்காட்டி சீமானிடம்தான் ஈழப் போராட்டத்தின் அடுத்தக்கட்ட ஒப்படைக்கப்பட்டது என்ற நாம் தமிழர் கட்சியினரின் வாதம் குறித்து புலம்பெயர் தமிழரான அரூஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு என்று நிழல் தமிழீழ நடைமுறை அரசு இருந்தது. அந்த நடைமுறை அரசு சார்பாக ஈழத்திற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்பதும், அவர்களை சந்திப்பதும் விடுதலைப்புலிகளின் மரபு. அப்படிதான் சீமானும் வந்தார். அவர் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்து பல இயக்குநர்கள் கொண்டு வந்திருந்தார்கள். ஏனென்றால் எங்கள் குரல்களை வெளி உலகத்திற்கு கொண்டுசெல்ல கலையும் ஒரு ஊடகம். அது சினிமாவாக இருக்கலாம், பாடலாக, இசையாக இருக்கலாம். சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல, சிங்கள வானொலி, பத்திரிகையை உருவாக்கவும் முயற்சித்தோம். அப்படிதான் இயக்கம் இருந்தது. இதில் சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
சீமான் இலங்கை வந்தார். அவரை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்தார். அவரை நெடுமாறன், வைகோ உள்பட பலரும் சந்தித்துள்ளனர். புலம் பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களை, பிரபாகரன் நேரம் ஒதுக்கி சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதனை சீமான் தனது தமிழக அரசியலுக்கு பயன்படுத்துவதை மிகவும் வெட்கக் கேடாகத்தான் பார்க்கிறோம். ஏனென்றால் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை கொண்டுசெல்ல சொன்னார்களே தவிர, இதை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய சொல்லவில்லை. பிரபாகரன் உள்பட ஈழத் தமிழர்கள் யாரும் தமிழக அரசியலில் அவர்கள் ஓருபோதும் ஈடுபட்டது இல்லை. ஏனென்றால் அது இன்னொரு நாடு. எமது பிரச்சினைகளை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல சொன்னோம். நாங்கள் கனடா, பிரிட்டானியாவில் புலம்பெயர் அமைப்புகள் போராடுகிறோமே தவிர, அந்நாட்டு அரசியலில் ஒருபோதும் தலையிட மாட்டோம்.
ஈழ இறுதிப் போரின்போது பல்வேறு தரப்பினரிடமும் விடுதலைப்புலிகள் செய்திகளை அனுப்பினார்கள். போரை நிறுத்த உங்கள் நாடுகளிடம், மக்களிடம் அழுத்தத்தை கொடுக்க சொல்லுங்கள் என்றுதான் அது செய்யப்பட்டது. போரை நிறுத்த ஒரு உதவியாகத்தான் அது அனுப்பப்பட்டதே தவிர, உங்களது அரசியலை நிலை நிறுத்த அனுப்பப்பட வில்லை. ஆனால் சீமான் இந்த 15 ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்காக ஆற்றிய தொண்டு என்ன? ஈழத்தில் சீமானால் ஏற்பட்ட ஏதாவது ஒரு நன்மை உண்டா என்று சொல்லுங்கள். அவருக்காக பேச நேரம் ஒதுக்குவது கூட புலம்பெயர் தமிழர்கள் கால விரயமாகதான் பார்க்கிறோம். சீமான் ஒவ்வொரு நாளைக்கும் ஒன்று பேசுவார். அவர் தனக்கு சாதகமாகவும், தனது கட்சியை வளர்ப்பதற்காகவும், தமிழக அரசை மிரட்டவும், இந்திய அரசை மிரட்டவும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும் தியாகத்தையும் பயன்படுத்துவது மிகவும் ஒரு கவலையான விஷயமாகத்தான் பார்க்கிறோம்.
ஈழத் தமிழர்களின் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதால் ஈழத் தமிழர்களுக்கு என்ன நன்மையை செய்துவிட்டார்? உண்மையில் ஈழப் போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் சீமான் கொண்டு வரப்பட்டதே புலம்பெயர் தேச மக்கள் ஓரணியில் திரண்டுவிடாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஒரு சதியாகும். புலம்பெயர் அமைப்புகள், மக்கள் வைத்திருக்கும் நிதியை மடைமாற்றம் செய்யவும், அவர்கள் ஓரணியில் திண்டுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட மாயை ஆகும். அந்த மாயை கடந்த 15 ஆண்டுகளாக பல புலம்பெயர் மக்களையும், அமைப்புகளையும் ஏமாற்றியும், திசை திருப்பியும் உள்ளது. இதில் இலங்கை அல்லது இந்திய உளவு அமைப்புகள் வெற்றி பெற்றதாகதான் தோன்றுகிறது. ஆனால் தற்போது மக்களுக்கு மெல்ல மெல்ல தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மை தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் ஈழ தமிழர்களுக்கு பாஸ்போர்ட் எடுப்பது பிரச்சினையாக உள்ளது. அவர்களது பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்வது கூட சிரமமாக உள்ளது. அவர்களை மீள் குடியேற்றம் செய்வது கூட பிரச்சினையாக உள்ளது. அதற்கு கூட சீமான் எதுவும் செய்யவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் 2.5 லட்சம் பேர் சாப்பிடக்கூட வழி இல்லாமல் உள்ளார்கள்.
சீமான் இன்னும் புலம்பெயர் சேதத்தில் உள்ள மக்களின் நிதியை பெருவதற்கு துப்பாக்கியை காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். புலம்பெயர் சேதத்தில் இப்போது உண்மை புரிய தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளோ, ஈழத் தமிழர்களோ இந்தியாவின் உள் விவகாரங்களில் அரசியலில் தலையிட்டது கிடையாது. பிரபாகரனையும், சீமானையும் நாங்கள் அருகில் கூட வைக்க முடியாது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, விடுதலைப் புலிகள் மீது கடுமையாக இருந்தார். இது குறித்து பிரபாகரனிடம் கேட்டபோது, நாங்கள் அந்த அம்மாவிற்கு நாம் எதுவும் செய்யவில்லை. ஏன் இவ்வளவு காழ்ப்புணர்வோடு இருக்கிறார் என தெரியவில்லை என்று மரியாதையாக அம்மா என்று தான் பேசுவார். மரியாதை எப்போதும் அவர் உதிர்க்கும் சொல்லில் இருக்கும். ஆனால் சீமான் இலங்கை வந்திருந்தபோது அவரிடம் ஜெயலலிதா குறித்து கேட்டபோது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் கொச்சையானது. விடுதலைப் புலிகள் அரசியலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறேன் என அவர் சொல்வது, தனது அரசியலை தக்க வைப்பதற்காக. அரசியலில் சரிவு ஏற்படும்போது எல்லாம் போலியான புகைப்படங்களோ, ஆடியோக்களோ, வீடியோக்களோ வெளியிட்டு தன்னை பரபரப்பாக வைத்திருப்பார். மற்றபடி தமிழ் மக்களுக்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் அவர் ஆற்றிய பணி என்று ஒன்று கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.