Homeசெய்திகள்கட்டுரைஅமித்ஷாவின் பேராசையால் உடையும் என்.டி.ஏ கூட்டணி? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

அமித்ஷாவின் பேராசையால் உடையும் என்.டி.ஏ கூட்டணி? உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்துவதாலோ, தனிப்பட்ட தலைவர்களை விமர்சிப்பதாலோ வாக்குகளை பெற முடியாது. இது மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு புரியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

2026ல் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் பாஜக கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026ல் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் அதிகப் படியான சீட்டுகளை வாங்குவதற்காகவும், பேர வலிமையை அதிகரிக்கவும் தாங்கள் வளர்ந்துவிட்டதாக பாஜக காட்ட முயற்சிக்கிறது. தற்போது தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகின்றன. இதில் பாஜக பலியாகிறது. அடிப்படையில் கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பாகத்தான் உறுதியாகும். தேமுதிக-வே நாங்கள் ஜனவரி மாதம் தான் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம் என்று அமித் ஷாவிடம் சொல்கிறார்கள். இல்லாவிட்டால் மதுரை மாநாட்டில் அமித்ஷா உடன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால் அதிமுகவை தவிர வேறுயாரும் செல்லவில்லை. அதுவும் கூட்டத்தில் பங்கேற்காமல் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பு அளித்துவிட்டு சென்றனர். ஊருக்கு முன்பாக அதிமுக ஏன்? பாஜக உடன் கூட்டணி வைத்தது. அதற்கு ஏன் பாஜக ஒப்புக் கொண்டது. இன்றைக்கு பாஜக 50 தொகுதிகளை கேட்கிறது. அதிமுக 50 இடங்களை எப்படி கொடுக்கும்?. அப்படி கொடுத்தால்,  மற்ற கட்சிகளுக்கு கொடுப்பதற்கு அவர்களுக்கு என்ன இருக்கும். இதை பயன்படுத்தி தான் அமித்ஷா 50 இடங்களை கேட்கிறார்.

தவெகவில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். ஜான் ஆரோக்கியசாமிக்கு நெருக்கமான அவர் காலங்காலமாக விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார். அவருக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. முன்னாள் மயிலாப்பூர் எம்எல்ஏ ராஜலட்சுமியும் தவெகாவில் இணைந்துள்ளார். விஜய், புதிய நபர்களை கட்சியில் சேர்ப்பதன் மூலம் அவர் அதிமுக கூட்டணிக்கு வரப்  போவது இல்லை என்று தெளிவாகிறது. கடைசியில் இருப்பது அதிமுக – பாஜக தான். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதை வைத்து அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று பேசியுள்ளார். அமித்ஷா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சொன்னால் முக்குலத்தோரின் வாக்குகள் எல்லாம் விழுந்துவிடும். நயினார் முக்குலத்தோர் சமுதாயம் என்பதால், எல்லோரும் அவருக்கு வாக்களிப்பார்கள் என்பது மிகவும் பைத்தியக்காரத்தனமான சிந்தனையாகும். ஒரு சமுதாயத்தில் இருப்பதால் வாக்குகள் எல்லாம் வந்துவிடாது. அந்த சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? எப்படி அந்த சமுதாயத்தின் அடையாளமாக திகழ்ந்தீர்களா? ஆனால் அமித்ஷா அப்படி நினைக்கிறார்.

அமித்ஷாவின் கருத்துக்கு தமிழ்நாடு பாஜக கோர் கமிட்டியில் மாற்றுக்கருத்து வைக்கக்கூடிய தலைவர்கள் யாரும் கிடையாது. அதுதான் சிக்கலாகும். மாற்றுக் கருத்து வைத்து தரவுகளுடன் சொன்னால் அமித்ஷா அதை புரிந்துகொள்வார். அப்போது பாஜக வசம் உள்ளது இரண்டே ஆயுதங்கள் தான். ஒன்று முருகன் மாநாடு. அதை ஏற்கனவே சீமான் கையில் எடுத்து வேல் வழிபாடு எல்லாம் நடத்திவிட்டார். அது தமிழ்நாட்டில் எடுபடவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் மத ரீதியாக வாக்காளர்களை ஒன்றிணைக்க முடியாது. பிறகு தனிப்பட்ட தலைவர்கள் எதிர்ப்பு என்பதும் எடுபடாது. முன்பு கலைஞர் எதிர்ப்பாக இருந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் எதிர்ப்பாக உள்ளது. இதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது. மேற்கு வங்கத்தில் எப்படி வெறும் மம்தா பானர்ஜி எதிர்ப்பு மட்டும் வாக்குகளை வாங்கித் தராதோ, இந்துத்துவா அணித் திரட்டுதல் மட்டும் வாக்குகளை வாங்கித் தராதோ, அதே தான் தமிழ்நாட்டில் நிலைமையாகும். பாஜக வளர்ந்துவிட்டதாக சொல்வதை அவர்களது கூட்டணி கட்சிகளான பாமகவோ, தேமுதிகவோ நம்ப தயாராக இல்லை. இன்னும் அவர்கள் வெயிட்டிங்கில் தான் உள்ளனர். அப்படி இருக்கிறபோது எப்படி ஆட்சியை பிடிப்பது? அமித்ஷா காண்பது உண்மையில் பகல் கனவுதான் என்று நான் நினைக்கிறேன்.

EPS - ஈபிஎஸ்

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி என்ற நிலைப்பாட்டில் அமித்ஷா உறுதியுடன் உள்ளார். ஆனால் அதிமுக தரப்பில் அமைதியாக உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக இருவரும் கூட்டணி அறிவித்தார்கள். அப்போது, இரு கட்சியினரும் இணக்கமாக செயல்படவும், போராட்டங்களில் ஒன்றாக கலந்துகொண்டு ஈடுபடவும் முன்கூட்டியே கூட்டணி அறிவிக்கப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் அறிவிப்பு வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை போராட்டங்களில் ஒன்றாக பங்கேற்றுள்ளனரா? என்றால் கிடையாது. அவர்கள் தனியாக போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் தனியாக போராட்டம் நடத்துகிறார்கள். இப்படி பட்ட சூழலில் இனிமேலும் அந்த இணக்கம் ஏற்படுமா? என்று தெரியவில்லை. அதிமுக – பாஜக கூட்டணிக்கு வரக்கூடிய சிறிய கட்சிகள் கூட இன்னும் வரவில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. பேர வலிமை வேறு இடத்தில் உள்ளது. நாம் அமைதியாக இருந்தால் நமக்கும் சீட்டுகள் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்கிற எண்ணம் பாமக போன்ற கட்சிகளுக்கு இருக்கும். பாமக 2006 கால கட்டத்தில் 18 தொகுதிகளை வென்றிருந்தனர். திமுக 96 தொகுதிகளை தான் வென்றிருந்தது. மைனாரிட்டி ஆட்சி. ஆளுநரிடம் முதன் முதலில் ஆதரவு கடிதம் கொடுத்தவர் ராமதாஸ். காரணம் அன்புமணிக்கு, திமுக தயவில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்து.

பாமக நிறுவனர் ராமதாஸ், ஏழைகளுக்காகவும், ஊமை ஜனங்களுக்காகவும் பாடுபடுவதாக சொல்கிறார். வன்னியர் சமுதாய மக்கள் 1985 கால கட்டத்தில் ஊமைகளாக இருந்தார்கள் என்பது உண்மைதான். அப்போது மருத்துவரின் குரல் பெரிதாக இருந்தது. பல்வேறு தியாகங்களையும் அவர் செய்தார். இத்தனை வருடங்கள் கழித்து, குடும்பம் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. நீங்கள் ஸ்டாலின் குடும்பம் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டினால், அதே புகார் உங்கள் மீதும் வரத்தானே செய்யும். அதை தாண்டி உங்களின் நிலைப்பாடு என்ன என்பதுதான் கேள்வி. அதுபோக பாமக தொடங்கிய இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் என்ன வாக்கு வங்கி வைத்திருக்கிறீர்கள்? அப்போது பாமக எந்த கூட்டணிக்கு சென்றாலும் அவர்கள் வெற்றிபெறக் கூடிய தொகுதிகளை கேட்பார்கள்.

பாஜகவுக்கு 30 தொகுதிகள் தான் அதிமுக கொடுக்கிறது என்றால், பாமகவுக்கும் அத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும். அப்போது அதிமுக எங்குதான் போய் நிற்கும்?. கூட்டணியில் இதுதான் மிகவும் சிக்கலான இடமாகும். தொகுதிகளின் எண்ணிக்கையை கூட இறுதி செய்துவிடலாம். ஆனால் தொகுதி பங்கீடுதான் கடினமானது. அதற்காக தான் ஒரு வருடத்திற்கு முன்னதாக கூட்டணி வைப்பது கிடையாது. திமுக கூட்டணி பல தேர்தல்களாக தொடர்கிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு முன்னதாக கூட்டணி வைத்தால் அது தொடருமா? என்றால் அதில் நிறைய கடினமான கடடங்கள் இருக்கிறது. அதை தாண்டி வர வேண்டும். எடப்பாடி பழனிசாமி, பாஜகவோடு கூட்டணி ஆட்சி என்று எந்த கட்டத்திலும் சொல்ல மாட்டார். சொன்னால் காலியாகி விடுவார். இப்படியான சிக்கலான சூழலில் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்வது, அவர் அவரது கொள்கைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை வேறாகும். அமித் ஷாவின் பேச்சு அவரது மனநிலையை தான் காட்டுகிறதே தவிர, கள எதாரத்தம் வேறாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ