சென்னை வில்லிவாக்கத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் காற்றில் விழுந்து 70 வயது முதியவர் காயம், மூவர் கைது.
சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் மோகன்(70) நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முந்தினம் இரவு வில்லிவாக்கம் பெருமாள் கோயில் தெரு தெற்கு மாட வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில், நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த தவெக கட்சி பேனர் காற்றில் கீழே சரிந்து மோகன் என்கிற 70 வயது முதியவரின் தலையில் விழுந்துள்ளது.இதில் தலையில் காயமடைந்த மோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் நெற்றி மற்றும் தலையில் அடிப்பட்டு காயமடைந்த மோகனுக்கு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மோகனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது மகனிடம் புகாரை பெற்று வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷ், ஜெகன் ,சந்தோஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், 4 பேருக்கு வில்லிவாக்கம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
முருகன் மாநாடு-பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்