மீன்களின் வரத்து குறைந்ததால் சென்னை காசிமேடு மீன்பிடிச் சந்தையில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மான்டஸ் புயல் கரையை கடந்தும், மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. போதிய அளவு மீன் வரத்து இல்லாததால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் அகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த வானிலை மாற்றம் காரணமாக சென்னை காசிமேட்டில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதனையடுத்து புயல் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியதும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் போதிய அளவிற்கு மீன் கிடைக்காததால் குறைந்த அளவு மீன்களோடு அவர்கள் கரைத் திரும்பினர். இதனை அடுத்து விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் மீன் வாங்க மக்கள் படையெடுத்தனர்.
மீன்களின் வரத்து குறைவு, ஐயப்ப பக்தர்கள் விரதம் உள்ளிட்ட காரணங்களால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரங்களில் வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 700 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
- கடல் விரால் கிலோ 400 ரூபாய்
- சங்கரா கிலோ 550 ரூபாய்
- சுறா மீன் கிலோ 500 ரூபாய்
- இறால் கிலோ 250 ரூபாய்
- கடம்பா கிலோ 250 ரூபாய்
- நெத்திலி கிலோ 200 ரூபாய்
- பாறை மீன் கிலோ 400 ரூபாய்
- நண்டு கிலோ 300 ரூபாய்
- வவ்வால் மீன் கிலோ 650 ரூபாய்
- கொடுவா கிலோ 550 ரூபாய்
காசிமேட்டில் ஆயிரம் விசை படகுகளில் 300 விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு தொழில் செய்ய சென்றுள்ள நிலையில் வானிலை மாற்றங்களால் மீன் வரத்து குறைந்துள்ளது.