பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராய நகரில் அவரது இல்லத்தில் காலமானார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன், விஸ்வரூபம், தியாகி, விடுதலை, குடும்பம் ஒரு கோவில், பந்தம், அன்புள்ள அப்பா உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதி அந்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதேபோல் எம்.ஜி.ஆர். நடித்த தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா?, மற்றும் ஜெமினிகணேசன் நடித்த வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, திருமகள், பெண் என்றால் பெண் போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். அவர் வசனம் எழுதிய அனைத்து படங்களும் திரையில் மாபெரும் வெற்றியை பெற்றது.

ஆரூர் தாஸ், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவ் ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்.
தியாகராய நகரில் வசித்து வந்த ஆரூர் தாஸ் முதுமை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.
- பாக்கியராஜ், வைரமுத்து அஞ்சலி
மறைந்த ஆரூர் தாஸின் உடலுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ஆரூர் தாஸின் உடல், மந்தைவெளி கல்லறை தோட்டத்தில் இன்று திங்கள் கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்படும்.