தொடர்ந்து எழுந்த கண்டனம்… தனுஷ் படப்பிடிப்பு ரத்து…
இந்திய திரையுலகின் உச்ச நடிகர் தனுஷ். காதல், காமெடி, கமர்ஷியல், ஆக்ஷன் என அனைத்து ரக திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் தனுஷ். கோலிவுட் எனும் கோட்டையில் கொடி நாட்டிய இந்த நாயகன், இன்று டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என இறக்கை கட்டி பறக்கிறார். தமிழில் ஹிட் அடித்த அவர், அடுத்து தெலுங்கு பக்கம் திருப்பினார். தொடர்ந்து இந்தியில் ராஞ்சனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்தியில் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்து புதிய படம் நடித்தார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் தனுஷ் புதிய படம் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சேகர் கம்முலா படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலையில் அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி பகுதியில் தொடங்கி நடைபெறுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்புக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில் பக்கர்கள் புகாரை கருத்தில் கொண்டு, தனுஷ் படப்பிடிப்புக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்வதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு அறிவித்துள்ளார். இதனால் படப்பிடிப்பு ரத்தானது.