‘பிங்க்’, ‘மிஷன் மங்கள்’, ‘உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்ற பல பிரபல பாலிவுட் திரைப்படங்களிலும், ஓடிடி வெப் தொடர்களிலும் நடித்துப் புகழ்பெற்ற நடிகை கீர்த்தி குல்ஹாரி ஆன்லைன் சைபர் மோசடியில் சிக்கி ரூ.2.43 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.


வங்கிக் குறுஞ்செய்தியால் நேர்ந்த அதிர்ச்சி!
கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடிகை கீர்த்தி குல்ஹாரியின் கைபேசிக்கு வங்கியிலிருந்து எச்சரிக்கை குறுஞ்செய்தி (Alert Message) ஒன்று வந்தது. அதில், அவரது கிரெடிட் கார்டை (கடன் அட்டை) பயன்படுத்தி 2,525 அமெரிக்க டாலர் அளவுக்கு வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கீர்த்தி, உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் (Customer Care) தொடர்புகொண்டு விசாரணை நடத்தினார்.
கார்டு உடனடியாக முடக்கம்!
வங்கி அதிகாரிகளுடன் நடத்திய விசாரணையில், அவரது அனுமதி இன்றி கிரெடிட் கார்டு மூலம் 4 தனித்தனி பரிவர்த்தனைகளில் மொத்தமாக ரூ.2.44 லட்சத்திற்கும் அதிமான தொகை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, மேலும் பண இழப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக வங்கி அதிகாரிகள் உடனடியாக அவரது கிரெடிட் கார்டை முடக்கினர் (Block).
காவல் நிலையத்தில் புகார்
இந்த ஆன்லைன் பண மோசடி சம்பவம் தொடர்பாக நடிகை கீர்த்தி குல்ஹாரி, மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் பேரில், மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தைக் கையாடல் செய்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
