தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… நேரில் ஆஜராக உத்தரவு
- Advertisement -
விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரும் வரும் அக்டோபர் மாதம் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் நடிருமானவர் தனுஷ். இவர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டர் சம்மதத்துடன்தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதி, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்துவிட்டதாகவும் அறிவித்தனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் முயற்சி செய்தனர்.

நடிகரும், மகளின் தந்தையுமான ரஜினிகாந்தும் இந்த முயற்சியில் ஈடுபட்டார். பல முறை பிரச்சனையை சரி செய்ய முயன்றார். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், தங்களின் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நோக்கில் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்