விஜய் படத்தின் டைட்டில் என்னுடையது : குமுறும் தெலுங்கு இயக்குனர்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 68-வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்பதன் சுருக்கமாக கோட் என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டாலும், ரசிகர்கள் இந்த டைட்டிலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குநர் நரேஷ் உப்பிலி என்பவர் இந்த டைட்டிலை ஏற்கனவே தனது படத்திற்கு வைத்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் விஷ்வக் சென் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாகல் என்ற படத்தை இயக்கியவர் இவர் தான். அடுத்ததாக இவர் தற்போது இயக்கி வரும் புதிய படத்திற்கு கோட் என தலைப்பு வைத்துள்ளாராம். படத்தின் வேலைகள் முடிந்து தற்போது புரமோஷன் பணிகளை துவங்க இருக்கும் நிலையில் தான், இப்படி விஜய் படத்திற்கு கோட் என தலைப்பு அறிவிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதேசமயம் இவர் இதுவரை படத்திற்கு கோட் என தலைப்பு வைத்திருப்பதை எந்த ஒரு போஸ்டராகவோ, இல்லை தலைப்பாகவோ அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி மிகப்பெரிய படங்களின் டைட்டில் அறிவிக்கப்படும்போது, சமீபகாலமாக இது போன்ற சர்ச்சைகள் எழுவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு முன்பு விஜய் நடித்த லியோ படத்திற்கும் அதன் டைட்டில் அறிவிக்கப்பட்ட போது, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் தானும் இதே டைட்டிலை தனது படத்திற்கு பதிவு செய்து வைத்துள்ளதாக எதிர்ப்பு குரல் எழுப்பினார். அதேபோல, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்கும் இதே பிரச்சனை வந்தது குறிப்பிடத்தக்கது.