மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து புஷ்பராஜ் மீது வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.சூது கவ்வும், ஜிகிர்தண்டா, இந்தியன் 2, கேஜிஎப் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பாபி சிம்ஹா. இவர் சென்னை மணப்பாக்கம் ராமச்சந்திரா காலனி பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார் பாபி சிம்ஹா. இவர் தற்போது துபாய் நாட்டில் படப்பிடிப்பில் பங்கேற்றார். அதனை முடித்து விட்டு நேற்று சென்னை விமான நிலையம் வந்தார்.
பிறகு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய நடிகர் பாபி சிம்ஹாவை அவரது பென்ஸ் காரில் ஓட்டுநர் புஷ்பராஜ் அழைத்து கொண்டு வீட்டில் விட்டார். பிறகு அவரது தந்தையை அழைத்து கொண்டு நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டார். இதையடுத்து மணப்பபாக்கம் செல்வதற்காக கிண்டி கத்திப்பாரா சென்றுள்ளாா்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பைக், 2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட 7 வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் பாபி சிம்ஹாவின் பென்ஸ் கார், மற்றும் 7 வாகனங்கள் சேதமடைந்தது. இதில் பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை- மகள் காயமடைந்தனர். தகவல் அறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹா காரை பறிமுதல் செய்தனர்.
மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநரான புஷ்பராஜை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து புஷ்பராஜ் மீது வழக்குப்பதிவு செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.