ஜி.வி. பிரகாஷ் – சைந்தவியின் விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் பின்னணி பாடகி சைந்தவி. இவர்கள் இருவரும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலின் அடையாளமாக 2020இல் இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் இருவரின் காம்போவில் வெளியான பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
ஆகையினால் இருவரும் திரைத்துறையில் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்தனர். ஆனால் திடீரென்று கடந்த 2024ஆம் ஆண்டு இருவரும் தங்களின் திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகி தங்களுக்கு விவாகரத்து வழங்கும்படியும், தாங்கள் இருவருமே பிரிந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளனர். மேலும் இவர்களின் பெண் குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி. பிரகாஷ் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 30) இவர்களின் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மீண்டும் இணைந்து வாழ மாட்டார்களா? என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவர்களின் 12 வருட திருமண உறவு முடிவுக்கு வந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


