இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்போது பல பெரிய ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் வீர தீர சூரன், இட்லி கடை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அத்துடன் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கும் இசையமைப்பாளராக களமிறங்கி உள்ளார்.
அதாவது அஜித்தின் 63வது படமாக உருவாக்கி வரும் குட் பேட் அக்லி படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே இந்த படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படப்பிடிப்புகளும் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வந்த தேவி ஸ்ரீ பிரசாத் படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுவிட்டார் என தகவல் வெளியானது. எனவே ரசிகர்களும் கங்குவா படத்தின் ரிசல்ட்டினால் தான் தேவி ஸ்ரீ பிரசாத்தை நீக்கிவிட்டனர் என்று சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் கொடுப்பதில் தாமதிக்கிறார் என்றும் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கும் நிலையில் எந்த பாடலையுமே தேவி ஸ்ரீ பிரசாத் கொடுக்கவில்லை என்பதாலும் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக ஜி.வி. பிரகாஷ் தான் குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளாராம். எனவே படக்குழு ஜிவி பிரகாஷிடம் பொங்கல் தினத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் விரைவில் பாடல்களை தயார் செய்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு ஜிவி பிரகாஷ் இன்னும் ஒரு வாரத்தில் 4 பாடல்களையும் தருகிறேன் என்று சொன்னதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.