தக் லைஃப் படத்திலிருந்து விலகியது தனக்கு வருத்தமளிப்பதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற பல படங்களில் நடித்துள்ள ஜெயம் ரவி இன்னும் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். மேலும் இவர், எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்திருந்த பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இவர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி ஒரு சில காரணங்களால் அப்படத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் ஜெயம் ரவி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் குறித்தும் தக் லைஃப் படம் குறித்தும் பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் நான் உதவி இயக்குனராக சேர்ந்தேன். டைரக்ஷன் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் சேர்ந்தேன். ஆனால் கமல் சாரை பார்த்து இன்ஸ்பயர் ஆனேன். அப்படி கமல் சாரை பார்த்து இன்ஸ்பையரான பல பேரில் நானும் ஒருவன் என்பதை பெருமையாக சொல்வேன். அவர் எல்லாவிதமான ரோல்களிலும் நடித்து விட்டார். சினிமாவில் அவர் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது போன்ற ஒரு நடிகருடன் வேலை செய்வது எனக்கு பெருமை தான். ஆனால் எனக்கு தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறியது மிகப்பெரிய வருத்தம். முதலில் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. கமல் சார் படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.