நடிகை காஜல் அகர்வால் பஹல்காம் தாக்குதல் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். குடும்பத்தினர், உறவினர்களை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழும் காட்சி பார்ப்போரை பதைபதைக்க செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் இந்த தாக்குதலுக்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்து – முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல் இல்லை. ஆனால் அதைதான் வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். பஹல்காமில் நடந்தது மனிதநேயத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் இடையிலான மோதல். ஒரு பெயரை வைத்து யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை என்பது எப்போதும் பயத்தையும், அதிக எதிர்ப்பு உணர்வுகளையும் மட்டுமே உருவாக்கும். நாம் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். நாம் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஒன்று பட வேண்டும்” என்று குறிப்பிட்டு ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார்.