கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள் இன்று (நவம்பர் 7).
தமிழ் சினிமா என்று நினைத்தாலே முதலில் நம் நினைவுக்கு வரும் பெயர் கமல்ஹாசன் தான். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது வென்றார். அன்று முதல் இன்று வரை சினிமாவிற்காக அளவில்லாத அர்ப்பணிப்பை கொடுத்து, கோலாட்சி செய்யும் சகலகலா வல்லவனாக வலம் வருகிறார். சினிமாவைப் பொறுத்தவரை இவருடைய அகராதியில் ஒரே மாதிரியான நடிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லை.
ஒவ்வொரு படங்களிலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், வெவ்வேறான பரிமாணத்தில் தோன்றி கலை மீது தான் கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்துவார். அந்த வகையில் கலைக்காக இவர் ஆற்றிய அர்ப்பணிப்பை விரல்விட்டு எண்ண முடியாது. அதாவது இவரை ‘கலைத்துறையின் பொக்கிஷம்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் இவர் திரைத்துறையில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர், நடன இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளையும் கொண்டவர்.
படங்களில் காதல், நகைச்சுவை, பாசம், கோபம், அரசியல், ஆக்சன் என எல்லா பாதைகளிலும் தனித்துவமான, புதுமையான வழிகளை பின்பற்றக் கூடியவர். கதை வித்தியாசமாக இருந்தால் வில்லனாகவும், பாடல் வித்தியாசமாக இருந்தால் பெண் குரலில் கூட பாடத் தயங்காதவர். சினிமாவில் சில சறுக்குகள் ஏற்பட்டால் மக்கள் மனதில் இருப்பதே ஒரு சவாலான விஷயமாக இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் பணியாற்றி, இன்றும் ஒரு நட்சத்திரமாக மின்னுகிறார் கமல்ஹாசன். 71 வயது ஆனாலும் அவருடைய வேகமும், உற்சாகமும் துளி அளவும் குறையாமல் மற்ற இளம் நடிகர்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் கடிகார முள்ளாய் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது தான் அவருடைய சிறப்பு.
இது தவிர புதிய தலைமுறை நடிகர்களுக்கும் ஒரு பாடமாகவும், ஊக்கமாகவும் விளங்குகிறார். இவ்வாறு தனது பிரமிக்க வைக்கும் திரைப்பயணத்தில் ஏராளமான விருதுகளை வென்று குவித்து, பல்வேறு சாதனைகளையும் படைத்து, எப்பேர்ப்பட்ட விமர்சனங்கள் ஆனாலும் அதை ஊதித் தள்ளிவிட்டு கலை மீது தான் கொண்ட காதலுக்கு எல்லையே இல்லை என்பதை நிரூபித்துவரும் கமலின் கலைப்பயணம் இன்னும் தொடர வாழ்த்துவோம்.


