ராஜமௌலி – மகேஷ் பாபுவின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி. இவருடைய இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் இயக்கும் ஒவ்வொரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் ராஜமௌலி, ஆர் ஆர் ஆர் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படமும் ராஜமௌலியின் மற்ற படங்களைப் போல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. தற்காலிகமாக SSMB 29 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்கள் இருவருமே நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 2027 மார்ச் 25-ல் இந்த படம் திரைக்கு வரும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.