
தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69), கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (மே 03) சென்னையில் உள்ள வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் கருணாஸ் கூறுகையில், “மனோபாலாவின் மரணம் பேரதிர்ச்சியாக இருக்கிறது; திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மனோபாலா அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்; எளிமையான மனிதர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
“அருமையான மனிதர் மனோபாலா; அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என நடிகர் மதன்பாபு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து உருவான ‘ஊர்க்காவலன்’ என்ற திரைப்படத்தின் இயக்குநர் மனோபாலா என்பது குறிப்பிடத்தக்கது.