மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி துருவ் விக்ரம் இந்த படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் கலையரசன், ரஜிஷா விஜயன், பசுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும், அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. நிவாஸ் கே. பிரசன்னா இந்த படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கும் நிலையில் எழில் அரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டது. மேலும் படமானது இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ‘தீக்கொளுத்தி’ எனும் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
அதைத்தொடர்ந்து நாளை (செப்டம்பர் 16) இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இந்த பாடலும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


