தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அண்மையில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ‘ஜவான்’ திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் இந்தி படத்திலேயே நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு விட்டார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமன்றி, சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். பல நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். அண்மையில் அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தில் பொருட்களை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. இப்படத்தில் சத்யராஜ், ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சுயமரியாதை சார்ந்த விஷயங்களில் நான் ரொம்ப கவனமாக இருப்பேன். அதை மட்டும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். எப்போதுமே மாஸ் ஆன படங்களை கொடுக்க முடியாது. ஆனால் நல்ல படங்களை தரலாம் என தெரிவித்தார்.
மேலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே சிலர் திட்டுகிறார்கள். என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம். இன்னும் நான் அந்த இடத்துக்கு வரவில்லையா என்று தெரியவில்லை.லேடி சூப்பர் ஸ்டார் என 10 பேர் பெருமையாக பேசும் நேரத்தில், பலர் தன்னை விமர்சிக்கிறார்கள் என கூறியுள்ளார்.