நடிகை மனிஷா யாதவ், கடந்த 2012 இல் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் ஆதலால் காதல் செய்வீர், ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி, ரிலீசுக்கு தயாராகி வரும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்திலும் சில நாட்கள் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் சீனு ராமசாமி, மனிஷா யாதவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் சில தினங்களாக பரவி வருகிறது. அதற்கு சீனு ராமசாமி மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். ஆனால் மனிஷா யாதவ், சீனு ராமசாமி உண்மையை மறைக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சீனு ராமசாமி மற்றும் மனிஷா யாதவ் ஆகிய இருவருமே பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு தனித்தனியாக பேட்டி அளித்துள்ளனர். இதனை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனு ராமசாமியின் சுயரூபத்தை அம்பலப்படுத்திய மனீஷா:
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு சீனு ராமசாமி மற்றும் மனிஷா தனித்தனியே அளித்த பேட்டிகள்.
சீனு சொன்னது:
இடம், பொருள், ஏவல் ஷூட்டிங் சமயத்தில் நானும், மனீஷாவும் வெவ்வேறு ஹோட்டல்களில்தான் தங்கி இருந்தோம். அப்படத்தில் இரண்டு… pic.twitter.com/eYqP3JS2sO
— Blue Sattai Maran (@tamiltalkies) November 27, 2023

அந்தப் பேட்டியில், “இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பு சமயத்தில் கிராமத்து கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்க மாட்டார் என்பதால் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சொன்னேன். ஆனால் கிராமத்து நாயகியாக தான் நடிப்பேன் என்று சொன்னார். அதற்காக அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டேன். இதன் காரணமாக தான் அவர் என் மீது பழி போட்டு இருக்கிறார்” என்று சீனு ராமசாமி கூறியிருக்கிறார்.
அதற்கு மனிஷா யாதவ், “சீனு ராமசாமி ஆபீஸிலிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னை புதிய படத்தில் நடிப்பதற்காக கேட்டார்கள். இடம் பொருள் ஏவல் படத்தில் சீனு ராமசாமி நடந்து கொண்ட விதம் மிக மோசமாக இருந்தது. அவரின் விருப்பத்திற்கு நான் இணங்காமல் இருந்தேன். அதனால்தான் என்னை படத்தில் இருந்து நீக்கினார். எனக்கு நடிக்கவே தெரியாது என்று பலரிடமும் பொய்யான தகவல் பரப்பினார். மேடை நாகரிகத்திற்காக மட்டுமே ஒரு குப்பை கதை இசை வெளியீட்டு விழாவில் நன்றி சொன்னேன். இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் சீனு ராமசாமி எந்த தைரியத்தில் எப்படி பொய் பேசுகிறார்? எனக்கு புது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதனால் இவரின் தவறுகள் மறைக்கப்படும் என்று நினைக்கிறாரா? அடிப்படை மனித குணம் கூட இல்லாத இவரைப் போன்ற மனிதர்கள் மீது எனக்கு எந்த மதிப்பும் கிடையாது. என்னைப் போல எந்த ஒரு புதுமுக நடிகையும் இப்படியான மோசமான அனுபவங்களை சந்திக்கவே கூடாது” என்று பேசியுள்ளார்.