‘பருத்தி வீரன்’ புகழ் நடிகர் செவ்வாழை ராசு காலமானார்
தமிழ் திரையுலகம் இன்று காலை மேலும் ஒரு திறமையை இழந்துள்ளது. தமிழ் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகர்களான மயில்சாமி, மனோபாலா ஆகியோர் அடுத்தடுத்த மரணமடைந்த நிலையில், தற்போது செவ்வாழை ராசுவின் மறைவும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த செவ்வாழை ராசு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கார்த்தியின் அறிமுகமான அமீரின் ‘பருத்திவீரன்’ படத்தில் பொணந்தின்னியாக நடித்ததன் மூலம் ராசு பிரபலமானார்.

ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்த படத்தில் ராசு நடித்த பல நகைச்சுவை காட்சிகள் இருந்தன. குறிப்பாக அவரது குரல் ரசிகர்களால் மிகவும் பின்பற்றப்பட்டது.
தேனியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ராசு, எம்.ஜி.ஆர் ஆட்சியில் பஞ்சாயத்துத் தலைவராகப் பணியாற்றி, பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்குமே காவலராகப் பணியாற்றினார்.

அவர் பாரதிராஜாவின் தூரத்து உறவினராக இருந்ததால் அவரை தனது சூப்பர் ஹிட் திரைப்படமான ‘கிழக்கு சீமையிலே’ மூலம் அறிமுகப்படுத்தினார். ராசு, ‘மைனா’, ‘கந்தசாமி’ உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


