இந்தியில் பிரியாமணி மற்றும் யாமி கௌதம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாலிவுட்டில் பிரியாமணி மற்றும் யாமி கௌதம் நடித்திருக்கும் திரைப்படம் ஆர்டிக்கிள் 370. படத்தில் இவர்களுடன் இணைந்து அருண் கோவில், கிரன் கர்மாகர், ஸ்கந்த் தாகூர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி62 ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து உள்ள படத்தை ஜியோ ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் செலவில் தயாரான இத்திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளது. இத்திரைப்படத்தில் காஷ்மீர் மாநில பாதுகாப்பு செயலாளர் ராஜேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருக்கிறார். தேசிய பாதுகாப்பு படை ஏஜெண்டாக யாமி கௌதம் நடித்திருக்கிறார்.
இத்திரைப்படம் நல்ல விமர்சனம் பெற்று வந்தாலும், இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான திரைப்படம் என்று இப்படத்தை வௌியிட அரபு நாடுகள் தடை விதித்துள்ளன. இப்படம் தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள இத்திரைப்படம் உதவும் என தெரிவித்திருந்தார்.