இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.தெலுங்கு திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ராஜமௌலி. இவருடைய இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் அதிக வசூலை வாரிக் குவித்து இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது தவிர ராஜமௌலி, பாகுபலி 3 படத்தை எடுக்கப் போகிறார் எனவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் தான் தனது கனவு திட்டமான மகாபாரதத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அப்டேட் கொடுத்திருந்தார் ராஜமௌலி. அதன்படி ராஜமௌலி மகாபாரதம் படம் பத்து பாகங்களாக உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ள ராஜமௌலியின் மகாபாரதம் படம் குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமௌலி, தன்னுடைய மகாபாரதம் படத்தில் நடிகர் நானியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் நானி தற்போது ஹிட் 3, தி பாரடைஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.