நடிகர் ரஜினி, கமலுடன் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவின் லெஜெண்ட்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்திருக்கின்றனர். அதன் பிறகு இருவருமே தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி 50 வருடங்களாக தமிழ் திரையுலகில் கோலாட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழா ஒன்றில் கலந்து கொண்ட கமல், ரஜினியுடன் இணைந்து புதிய படம் நடிக்கப் போவதாக கூறியிருந்தார். அதே சமயம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும், அந்த படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் எனவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரஜினி, “நான் அடுத்ததாக ரெட் ஜெயன்ட் மற்றும் ராஜ்கமல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். ஆனால் டைரக்டர் இன்னும் முடிவாகவில்லை. நானும், கமலும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதற்கேற்ப கதை, கதாபாத்திரங்கள் அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்போம். அவருடன் இணைந்து நடிக்கிற மாதிரி பிளான் இருக்கிறது. ஆனால் கதை, டைரக்டர் எதுவும் இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.


