Homeசெய்திகள்சினிமா“அவரை பிரமிப்புடன் பார்த்தேன்” - விஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர்

“அவரை பிரமிப்புடன் பார்த்தேன்” – விஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர்

-

வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழலில் இருந்து நடிகர் சூர்யா, தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவு இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தரையில் சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்த அவர், பின்னர் கண்களை மூடி அழுதார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, அண்ணனின் பிரிவு மிகவும் வருத்தமாக உள்ளது. நான்கு, ஐந்து படங்கள் நடித்த பிறகும் எனக்கு பெரிய வாய்ப்புகளும், பாராட்டுகளும் கிடைக்கவில்லை. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 10 நாட்களை வரை அவருடன் சேர்ந்து பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் மிகவும் அன்புடன் என்னை நடத்தினார். ஒவ்வொரு நாளும் அவரை பிரம்மிப்புடன் பார்த்தேன். முதல் நாளே அவருடன் சேர்ந்து சாப்பிடுமாறு அழைத்தார். வேண்டுதலுக்காக 8 ஆண்டுகள் அப்போது அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். அப்போது என்னை உரிமையுடன் திட்டி, நீ நடிகன், உடலில் சக்தி வேண்டும் என சொல்லி என்னை அசைவம் சாப்பிட வைத்தார். அவரைப் போல மற்றொருவர் கிடையாது. இறுதி ஊர்வலத்தில் அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய இழப்பு என சூர்யா கண்கலங்கிய படி பேசினார்.

MUST READ