பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் மூன்று நடிகைகள் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கேஜிஎஃப் சாப்டர் 1 மற்றும் சாப்டர் 2 ஆகிய படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமானவர் பிரஷாந்த் நீல். அதை தொடர்ந்து இவர் சலார் திரைப்படத்தையும் இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக NTR 31 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைக்க புவன் கௌடா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கிட்டத்தட்ட ரூ. 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது.
அதே சமயம் நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடுகிறார் எனவும் சொல்லப்பட்டது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகை ராஷ்மிகா இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என லேட்டஸ்ட் தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த படமானது 2026 ஜூன் 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.