விஷ்ணு விஷாலின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது ஆர்யன், ஓர் மாம்பழ சீசனில் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் இவர் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் இரண்டு வானம் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இயக்குனர் கோகுல், அருண் ராஜா காமராஜ் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷ்ணு விஷால். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படங்கள் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இந்த படங்கள் கைவிடப்பட்டதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதற்கிடையில் இவர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டாகுஸ்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதில் விஷ்ணு விஷால், ஐஷ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் வெளியான கட்டாகுஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைய இருப்பதாகவும், இவர்களது கூட்டணியிலான புதிய படத்தினை விஷ்ணு விஷாலே தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படம் கட்டாகுஸ்தி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.