அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தீவிர விசாரணை! நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நடிகர் விக்ரமுக்கு 3 நாட்கள் கெடு!
சமீபத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம், அரிய வகை உயிரினமான ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) வகை குரங்குடன் இருக்கும் வீடியோ ஒன்றைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பாதுகாக்கப்பட்ட உயிரினத்தைச் சட்டவிரோதமாக வைத்திருப்பதாகக் கடும் சர்ச்சைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

பெருந்துறை பண்ணையில் வனத்துறை அதிரடி சோதனை
வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகர் விக்ரமின் வீடியோவில் இடம்பெற்ற அந்த லார் கிப்பான் குரங்கு, ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவருக்குச் சொந்தமானது என்பது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, நேற்று வனத்துறை அதிகாரிகள் பெருந்துறையில் உள்ள கேசவநாதனின் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 2 லார் கிப்பான் குரங்குகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். விசாரணையில், மணிப்பூரைச் சேர்ந்த ‘லைகுராம்’ என்பவரிடமிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு 3 குரங்குகளை வாங்கியதாகவும், அதில் ஒன்று இறந்துவிட்டதால் தற்போது 2 குரங்குகள் மட்டுமே உள்ளதாகவும் கேசவநாதன் தெரிவித்துள்ளார்.
ஆவணங்கள் செல்லாது: குரங்குகள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு!
சோதனையின் போது கேசவநாதன் சமர்ப்பித்த ஆவணங்களை வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், அந்த அரிய வகை உயிரினங்களை வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, மணிப்பூரில் இருந்து குரங்குகளை வாங்கியதற்கான செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரி கேசவநாதனுக்கு வனத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஓரிரு நாட்களுக்குள் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அந்த 2 லார் கிப்பான் குரங்குகளும் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், விற்பனை நோக்கத்திற்காகப் பெருந்துறையிலிருந்து சென்னைக்கு இக்குறங்குகள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
படப்பிடிப்பு தளத்திற்கே சென்று நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ்!
இவ்வழக்கின் தொடர்ச்சியாக, இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் விக்ரமிடம் இருந்தும் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால், நேற்று நடிகர் விக்ரம் படப்பிடிப்பில் இருந்த இடத்திற்கே நேரில் சென்ற வனத்துறை அதிகாரிகள், அவருக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் வழங்கினர்.
நோட்டீஸின் முக்கிய அம்சங்கள்:
வீடியோவில் இடம்பெற்ற லார் கிப்பான் குரங்கை வாங்கியதற்கான விவரங்கள் மற்றும் உரிமையாளர் ஆவணங்களை 3 நாட்களுக்குள் வனத்துறை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கத் தவறினால், வனத்துறை சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரிய வகை வனவிலங்கைப் பயன்படுத்திய விவகாரத்தில் முன்னணி நடிகருக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது திரையுலகிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!
