மலையாள நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், நம்பத்தகுந்த எந்த ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார். அவரது புகாரை பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊனுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் இடத்தில் நிவின் பாலி இல்லை. அவரது பயண விபரங்கள், க்ரெடிட் கார்டு பரிவர்த்தனை உள்ளிட்ட விபரங்கள் திரட்டப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தகவல்.இதன் மூலம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிவின் “இது பொய் குற்றச்சாட்டு. சட்டப்படி போராடி இந்த வழக்கிலிருந்து வெளியே வருவேன்” என்று தெரிவித்திருந்தார். அதேபோல அவரின் நண்பரும், இயக்குநருமான வினீத் ஸ்ரீனிவாசன், பாலியல் புகார் அளிக்கப்பட்ட தேதியில் நிவின் பாலி தன்னுடன் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படபிடிப்பில் இருந்ததாக கூறியது கவனிக்கத்தக்கது.