தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான யோகி பாபு தற்போது அடுத்தடுத்த படங்களை ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதேசமயம் காமெடியையும் அவர் கைவிடவில்லை. ஒரு பக்கம் ஹீரோவாக, மறுபக்கம் காமெடியனாக நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் யோகி பாபு, ரஜினியுடன் இணைந்து ஏற்கனவே தர்பார், ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார் யோகி பாபு. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் யோகி பாபு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரஜினி குறித்தும் நெல்சன் குறித்தும் பேசி உள்ளார்.
அதன்படி அவர், “நெல்சனை சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்க இயக்குனர் என்று சொல்வேன். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சார் மிகவும் உற்சாகமாக இருப்பார். ரஜினி சார், நெல்சனிடம் பாபுவை நம்ம விடக்கூடாது. முதல் பாகத்தில் என்ன வச்சு செஞ்சிருக்காரு. அதனால இந்த பாகத்துல அவரை வச்சு செய்வேன்னு நகைச்சுவையா சொல்லியிருக்கார். நான் வேற பயந்துகிட்டே இருக்கேன். ரஜினி சார் என்ன கவுன்டர் அடித்தாலும் அதைவிட பிரமாதமா கவுன்டர் அடித்து விடுகிறார். அதனால்தான் அவர் இன்று வரையிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -