கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலுக்காக போலி உதவி ஆய்வாளராக நடித்த பெண்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் உதவி ஆய்வாளர் எனக்கூறி நாகர்கோவில் பகுதியில் வண்டியில் வலம் வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த காவல் துறை அதிகாரிகள் அவர் குறித்து விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். அதில் சில இளைஞர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டாக வைத்ததுடன், பேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும் அந்த புகைப்படங்களை பார்த்ததும் அவர் போலி என்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து உதவி ஆய்வாளர் சீருடையில் பைக்கில் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் அபி பிரபா(34) எனவும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அபி பிரபா(34) சென்னைக்கு ரயிலில் சென்ற போது நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த சிவா(24) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நட்பு காதலாக மலர்ந்துள்ளது.
34 வயது ஆன அபி பிரபா தனக்கு 24 வயது ஆவதாக கூறி 24 வயதான சிவாவை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிவாவை வற்புறுத்தியுள்ளார் அபி பிரபா. அதற்கு, அரசு பணியில் இருக்கும் பெண்தான் வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துவதாக தெரிவித்ததுடன் ஒரு திட்டமும் வகுத்துக் கொடுத்துள்ளார். அதன் படி, அபி பிரபாவுக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் சீருடைகளை தைத்துக் கொடுத்ததுடன் உதவி ஆய்வாளராக நடிக்கும் படி ஐடியா கொடுத்துள்ளார்.
மேலும் நாகர்கோவிலுக்கு எஸ்.ஐ கெட்டப்பில் வந்த அபி பிரபா பள்ளிவிளை பகுதியில் உள்ளவர்களிடம் தான் சென்னை குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராக இருப்பதாகவும், விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பணி மாறுதலாகி வர உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் அபி பிரபாவுடன் நின்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர்.
அபி பிரபா போட்டிருந்த சீருடையில் வலது பக்கம் வைக்க வேண்டிய பெயரை இடது பக்கம் வைத்திருந்தார். ஸ்டார்களையும் இடம் மாற்றி வைத்திருந்தார். அவர் தப்புத் தப்பாக சீருடை அணிந்திருந்ததை வைத்தே அவர் போலி எஸ்.ஐ என்பதை போலீசார் கண்டறிந்தனர். உடனடியாக வடசேரி போலீசார் அபி பிரபாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகியதாகவும் மேலும் சிவாவை இரண்டாவதாக தான் காதலித்ததாகவும் போலீசார் நடத்தி விசாரணை தெரிய வந்துள்ளது.
மேலும் இவர் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என்பதும், அபி பிரபா மற்றும் அவருக்கு ஐடியா கொடுத்த சிவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ எனக் கூறி பணம் வசூல் செய்துள்ளாரா அல்லது வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது வரை சிவா தலைமறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி!