கொரோனா காலத்தில் ஜவுளி தொழிலில் நஷ்டம். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மோசடியில் இறங்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம்.காதலிக்காக வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்த அரியலூர் இளைஞர் புகாரின் பேரில் போலீசார் கைது நடவடிக்கை.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் இவர் தனது உறவினருக்கு (தனது காதலிக்காக )அரசு வேலை ( கிளர்க் பணி ) வாங்குவதற்காக, நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான ஈரோட்டை சேர்ந்த மோகன் (வயது 47) என்பவரை அனுகி உள்ளார். கிளார்க் அலுவலக உதவியாளர் என பத்து வகையான பணிகள் வாங்கி தருகிறோம்.. என ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு ரேட் என்று சொல்லியுள்ளார்கள்.
தினேஷ் கிளர்க் பணிக்காக ஒன்பது லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி வேலையும் வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை. பிறகு ஒரு நாள், வால் டாக்ஸ் சாலை பகுதிக்கு வரவழைத்து அரசுத்துறையில் கிளர்க் பணிக்கான போலி நியமன ஆணையை வழங்கிவிட்டு மோகன் தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பாக தினேஷ் சென்னை யானை கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈரோட்டை சேர்ந்த மோகன் மற்றும் அவரது தோழி கௌசல்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 34 போலி பணி நியமன ஆணைகள், 48 அரசுத்துறைகளின் முத்திரைகள், லேப்டாப் மற்றும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மோகன் ஆரம்ப காலத்தில் பனியன்களை மொத்தமாக வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கொரோனா காலத்தில் தொழில் முடங்கி போகவே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அப்போதுதான் அரசு வேலைக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டு அவர்களை குறிவைத்து அவர்களிடம்அரசுத்துறை உயரதிகாரிகள், அமைச்சர்களை தனக்கு நன்கு தெரியும் என கூறி நம்ப வைத்து சென்னையில் வெவ்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரை 35 பேரை மோசடி செய்து பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரித்தால் தமிழகத்தில் வேறு எந்தெந்த மாவட்டங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.