அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த ஜிதேந்திர படேல் என்பவர் தலைமையில் விசா மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருடன் இணைந்து பலர் சேர்ந்து கடை உரிமையாளர்களுக்கு பணம் வழங்கி கொள்ளை சம்பவங்களை நாடகமாக ஏற்பாடு செய்து, அதன் மூலம் விசா பெறும் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுக்கடை உள்ளிட்ட சுமார் 6 கடைகளின் உரிமையாளர்களிடம் பணம் கொடுத்து கொள்ளை நடந்தது போல நாடகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் கைதானவர்களுக்கு பணம் வழங்கி, அவர்களை கொள்ளையர்களாக நடிக்க வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் கடைகளில் பணம் பறித்துச் சென்றதாக காட்டி, தாமதமாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களில் கடைகளில் வேலை செய்த சட்டவிரோத குடியேறிகள், தாங்கள் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்கள் என காட்டி அமெரிக்காவில் வழங்கப்படும் U visa பெற ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விசாவை முறைகேடாகப் பெறுவதற்காகவே இத்தகைய கொள்ளை நாடகங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மோசடி நடைப்பெற்று வந்ததாகவும், கடை உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இணைந்து பணம் வாங்கி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் ஜிதேந்திரகுமார் படேல், மஹேஷ்குமார் படேல், சஞ்சய்குமார் படேல் , அமிதாபாஹின் பமேல், சங்கீதாபென் படேல், மிதுல் படேல், ரமேஷ்பாய் படேல், ரோனக் படேல், சோனால் படேல், மின்கேஷ் படேல் உள்ளிட்ட 10 இந்தியர்களை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த மோசடியில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தீபிகாபெண் படேல் என்பவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜிதேந்திர குமார் படேல் உள்ளிட்ட 6 பேர் பாஸ்டன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதேபோல் கெண்டக்கி மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ரமேஷ்பாய் படேல் உள்ளிட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசா மோசடி வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரினால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – ஐ.நா.கவலை
