செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே காதலித்த குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கூலிப்படையை ஏவி கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி மற்றும் அவரது மகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காதலுக்கு எதிர்ப்பு; அரங்கேறிய கொடூரம்
தையூர் பகுதியைச் சேர்ந்த பிரவீண்குமார் (22) என்ற எலக்ட்ரீஷியன், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரைக் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், ‘பொருளாதார அந்தஸ்து’ காரணமாக பெண்ணின் வீட்டார் இக்காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் பிரவீண்குமார் கொடூரமாக வெட்டப்பட்டார். ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 20-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீதியை மறித்துப் போராட்டம்
பிரவீண்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தையூர் பைபாஸ் ரவுண்டானா பகுதியில் உறவினர்களும் நண்பர்களும் வாகனத்தை மறித்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர். தையூரைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஏழுமலை மற்றும் அவரது மகன் கவுதம் ஆகியோரே கூலிப்படையை ஏவி இந்த ஆணவக்கொலையைச் செய்ததாகக் குற்றம் சாட்டி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தினர்.

கூலிப்படை ஏவிய தவெக நிர்வாகி கைது
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காதலைக் கைவிடுமாறு பிரவீண்குமாரை ஏற்கனவே எச்சரித்த ஏழுமலை, தான் நேரடியாக இதில் ஈடுபட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கூலிப்படையை ஏவியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த தவெக நிர்வாகி ஏழுமலை, அவரது மகன் கவுதம் மற்றும் கொலையில் தொடர்புடைய நிதிஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் கூலிப்படையைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியான சதீஷ் என்பவனைக் கேளம்பாக்கம் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
