நெல்லை – சென்னை வழித்தடத்தில் பயணித்த தனியார் ஆம்னி பேருந்தில், இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கிய தம்பதியின் 40 பவுன் தங்க நகைகள் அடங்கிய பையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இயற்கை உபாதைக்குச் சென்ற இடத்தில் நடந்த சோகம்
திருநெல்வேலி மாவட்டம் பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (56). இவர் தனது மனைவி ஹீலியத்துடன் நெல்லையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு கரிசல்குளம் விளக்கு பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் உணவகத்தின் (ஹோட்டல்) அருகே பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது, பயணிகள் அனைவரும் உணவருந்தவும் இயற்கை உபாதை கழிக்கவும் கீழே இறங்கினர். அதேபோல, ஜஸ்டின் மற்றும் அவரது மனைவி ஹீலியம் ஆகிய இருவரும் தாங்கள் வைத்திருந்த கைப்பையைத் தங்களது இருக்கையிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றுள்ளனர்.

40 பவுன் தங்க நகைகள் மாயம்
சிறிது நேரம் கழித்து இருவரும் பேருந்திற்குத் திரும்பிய போது, தங்களது இருக்கையில் வைக்கப்பட்டிருந்த பை காணாமல் போயிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பையில் சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ஆடைகள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்திற்குள் நகைப் பை திருடப்பட்ட தகவல் பரவியதும் சக பயணிகளிடையே பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
போலீசார் சோதனை & வழக்குப்பதிவு
இச்சம்பவம் குறித்து உடனடியாக கயத்தாறு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீவிர முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். மேலும், அந்த ஆம்னி பேருந்தைக் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சக பயணிகளிடம் சோதனையிட்டனர். இருப்பினும், காணாமல் போனதாகக் கூறப்படும் நகைப் பை கிடைக்காததால், பயணிகளின் நலன் கருதி பேருந்தை அங்கிருந்து செல்ல விடுவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கயத்தாறு போலீசார், உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகையைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் லாரியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.8 கிலோ கஞ்சா, லாரி பறிமுதல்
